பணக்காரர்களுக்கு 40 % வருமான வரி விதிக்க வேண்டும் – வரித்துறை அதிகாரிகள் சங்கம் பரிந்துரை!

27 Apr 2020
  • ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விகிதத்தை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
  • சொத்து வரியை (wealth tax) மீண்டும் அறிமுகப்படுத்தவேண்டும்
  • ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் (taxable income)  4 சதவீத கோவிட் -19 செஸ் விதிக்க வேண்டும்
  • ஏழைகளுக்கு ஒரு மாதத்திற்கு ரூ .5 ஆயிரம் வரை கொடுக்க வேண்டும்
  • சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், வணிகங்களுக்கும் மூன்று ஆண்டு வரிவிலக்குக் கொடுக்கப்பட வேண்டும்

இவை, பொருளாதாரத்தை மீட்பதற்காக இந்திய வருவாய் சேவையின் (ஐஆர்எஸ்) 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ) மற்றும் மத்திய நிதி அமைச்சகத்திற்குச் சனிக்கிழமை வழங்கிய “கோவிட் -19 தொற்றுநோய் நிதித்திட்டம்” என்ற அறிக்கையின் ஒரு பகுதியாக இந்த பரிந்துரைகள் உள்ளன. இந்த பரிந்துரைகள் மத்திய நேரடி வரி வாரியத்திற்கும் (CBDT) அனுப்பப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தைப் புதுப்பிக்க அரசாங்கம் கணிசமாக அதிக செலவு செய்ய வேண்டும், அதற்குக் கூடுதல் வருவாயை ஏற்கனவே துன்பத்தில் இருக்கும் சாமானியருக்குச் சுமை ஏற்படாத வழிகளில் திரட்ட வேண்டும். இது போன்ற காலங்களில், பெரும் செல்வந்தர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்குப் பொதுநலனை உறுதி செய்வதில் அதிக கடமை உள்ளது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அரசின் வருமானத்தைக் கூட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையின் விவரங்களைச் சுருக்கமாகக் காண்போம்.

பணக்காரர்களுக்கு கூடுதல்வரி

ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வருமான வரி வீதத்தை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும் அல்லது 5 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட நிகர சொத்து உள்ளவர்களுக்கு செல்வ வரியை (wealth tax)  மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்.

பொருளாதாரத்தை புதுப்பிப்பதில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் 5-10 மிக முக்கியமான திட்டங்களை அரசாங்கம் அடையாளம் காண வேண்டும். செல்வந்தர்களுக்கு வரிவிதிப்பதன் மூலம் திரட்டப்படும் கூடுதல் வருவாய் இந்த 5-10  திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 10 லட்சத்திற்கு மேல் வருமானம் (taxable income)  உள்ளோர்க்கு கோவிட் -19 நிவாரணத்தின் அடிப்படையில் 4 சதவீத கூடுதல் செஸ் விதிப்பதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் ரூ .15,000 முதல் 18,000 கோடி வரை இருக்கலாம் என்றும் அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.

வரி சலுகைகளை விரிவுபடுத்துவதன் மூலம் கோவிட் -19 நிவாரணத்திற்காக சி.எஸ்.ஆர் நிதிகளை திரட்ட வேண்டும். கோவிட் -19 நெருக்கடியின் போது, வேலையில்லா  நாட்களில் தொடர்ச்சியான ஊதியத்தை வழங்குவதை ஊக்குவிப்பதற்காக ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை சி.எஸ்.ஆரின் கீழ் கணக்கில் காட்ட , கார்ப்பரேட்டுகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

அதிக நிதி திரட்டுவதற்காக, ஒரு புதிய வரி சேமிப்பு திட்டத்தையும் (tax saving scheme) , எடுத்துக்காட்டாக, கோவிட் -19 சேமிப்பு சான்றிதழையும் இந்த அறிக்கை  பரிந்துரைக்கிறது.

(செல்வ வரி என்பது ஒரு நிறுவனத்தின் சொத்துக்களை வைத்திருப்பதற்கான வரி. பணம், வங்கி வைப்பு, ரியல் எஸ்டேட், காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் உள்ள சொத்துக்கள், இணைக்கப்படாத வணிகங்களின் உரிமை, நிதிப் பத்திரங்கள் மற்றும் தனிப்பட்ட அறக்கட்டளைகள் உள்ளிட்ட தனிப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு இதில் அடங்கும்.)

மின்-வர்த்தக  நிறுவனங்களுக்கு சமன்பாட்டு வரியை அதிகரித்தல்

கொரோனா வைரஸ் பொருளாதாரம் பெரும்பாலும் டிஜிட்டல் / ஆன்லைன் / இ-காமர்ஸ் வழியே இயங்குகிறது என்பதால், நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் ஜூம் போன்ற ஆன்லைன் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் சமன்பாடு வரி அல்லது “கூகிள் வரி”யை  அதிகரிக்க வேண்டும். விளம்பர சேவைகளுக்கு 6 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகவும், மின்-வர்த்தகப் பணிக்கு 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகவும் வரிகளை உயர்த்த வேண்டும்.

2017-18 நிதியாண்டிற்கான சமன்பாட்டு வரி வசூல் ரூ. 550 கோடியாகவும், 2018-19 நிதியாண்டு ரூ. 939 கோடியாகவும் இருந்துள்ளது. “இத்துறையில் வணிக வளர்ச்சி விகிதத்தின் அதிகரிப்பு வருவாயின் நல்ல தொகையை பங்களிக்கும். மேலும், வரிவிதிப்பு வருமான வரிச் சட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாததால், இது இந்தியாவின் வருமான வரி ஒப்பந்தங்களுக்கு உட்பட்டதாக இருக்காது.”

(நாட்டிற்கு வெளியே இயங்கும் Google,Facebook ,etc போன்ற இணைய சேவையை பயன்படுத்துவதற்கு அறிவிக்கப்பட்டுள்ள சமநிலைப்படுத்தல் வரியே “Goggle Tax” என்று பிரபலமாக அறியப்படுகிறது)

ஏழைகளுக்கு வருமானத்தை உறுதி செய்தல் 

குறைந்தது ஆறு மாத காலத்திற்கு பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய 12 கோடி குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ .3,000 முதல் 5,000 வரை நேரடி பண பரிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

இந்த நெருக்கடி மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும் கிராமப்புற சாலைகள் கட்டுவது, பொது சுகாதார உள்கட்டமைப்பு, ஆரம்ப பள்ளி கட்டிடங்கள்  போன்ற பொதுப்பணித் திட்டங்களை உருவாக்குவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

மிகவும் திட்டமிட்டு செயல்பட்டால், மூன்று மதிப்புமிக்க நோக்கங்களை ஒன்றாக அடைய முடியும்,

  1. வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு மூலம் வருமான ஆதரவை வழங்குதல்
  2. பொது உள்கட்டமைப்பை உருவாக்குதல்
  3. மனித மூலதனத்தில் முதலீடு செய்தல்

 

சுகாதாரத் துறை மூலம்  பொருளாதாரத்தை இயக்குதல் 

அடுத்த ஆண்டு அல்லது அதற்கு பொருளாதார வளர்ச்சிக்கான உந்து சக்தியாக சுகாதாரத் துறை செயல்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

வரிவிதிப்பு கண்ணோட்டத்தில், சுகாதாரத் துறையில் செயல்படும் அனைத்து கார்ப்பரேட்டுகள், நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முழுமையான வரிவிலக்கு முன்மொழியப்பட வேண்டும். சுகாதாரத்துறையில் இயக்கும் இந்த நிறுவனங்களுக்கு வரிவிலக்கு வழங்குவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கலாம். அனால் மருந்துகள், முகமூடிகள், கையுறைகள், கவுன், வென்டிலேட்டர்கள், சோதனை ஆய்வகங்கள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுவதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு வரிவிலக்கு கட்டாயமாக உறுதிப்படுத்தப்படவேண்டும்

 

நுகர்வுத்திறனை அதிகரிக்த்தல்

நுகர்வுத்திறனை அதிகரிப்பதற்கும், வருமானத்தை அதிகரிப்பதற்கும், பங்குச் சந்தை சரிவின் காரணமாக சில்லறை முதலீட்டாளர்கள் அனுபவிக்கும் குறுகிய கால மூலதன இழப்பை சமாளிக்க சிறப்பு வரிவிலக்கு முறையை அமல்படுத்த வேண்டும்.

ரூ .10 லட்சத்துக்கும் குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் அல்லது வேறு எந்த கொடுப்பனவுகளையும்(allowances) வரி விதிக்கக்கூடிய வருமானமாக அரசாங்கம் கருதக்கூடாது. வேலை இழந்தவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு அல்லது புதிய வேலையே பெறும்வரை வரி செலுத்துதலை ஒத்திவைக்க அனுமதிக்க வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆட்டோமொபைல்கள் மற்றும் மின்னணு பொருட்களை வாங்குவதில், வீடு வாங்குவதில் அதிக சலுகைகள் வழங்க வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நெருக்கடியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ .5 கோடி -10 க்கும் குறைவாக வருமான வரி ஈட்டும் இந்தத் துறைகளுக்கு வரித்தடை விதிக்க வேண்டும்.

 

தமிழில்: ராதா
https://theprint.in/economy/covid-19-cess-40-tax-for-rich-irs-officers-offer-economy-revival-tips-to-modi-govt/409108/

 

 

பெரும் பணக்காரர்கள் மீது ‘கொவிட் சொத்து வரி’ ஏன் விதிக்க வேண்டும் ?

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW