புல்டோசரும் நீதிமன்றமும் – ரியாஸ்

17 Apr 2025

முகலாயப்  பேரரசர் அவுரங்கசீப்பின் மண்ணறையை தகர்க்க வேண்டும் என்ற வினோதமான கோரிக்கையை முன்வைத்து மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் மார்ச் 17 அன்று விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் ஆகிய பாசிச இந்துத்துவ அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது புனித குர்ஆன் வசனங்கள் அடங்கிய துணி ஒன்று எரிக்கப்பட்டதாக செய்தி பரவியதை தொடர்ந்து முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய போராட்டங்களில் இறங்கினர். வழக்கம்போல் இந்துத்துவவாதிகள் தொடங்கிய பிரச்சனையில் முஸ்லிம்கள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு ஏராளமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட இரண்டு முஸ்லிம்களின் சொத்துகளை நாக்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மார்ச் 24 அன்று புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளினர். ‘சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்கள்’ என்று தாங்கள் தயாராக வைத்திருந்த காரணத்தைக்  கூறி இந்த இடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகியதைத் தொடர்ந்து பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை இடிப்பு நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

‘சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிய முறையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டதா?’ என்று கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் நிதின் சாம்ப்ரே மற்றும் விருஷாலி ஜோஷி ஆகியோர் ‘சம்பந்தப்பட்டவர்கள் அவர்கள் மதத்தின் காரணமாக குறி வைக்கப்படுகின்றனரா?’ என்றும் கேள்வி எழுப்பினர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக முஸ்லிம்களின் உடமைகளை தரைமட்டமாக்குவதற்காக ‘சட்டவிரோத கட்டிடங்கள்’ என்ற பதத்தை பயன்படுத்தி இந்துத்துவ ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மூலமாக நடத்தும் புல்டோசர் அராஜகம் நாட்டின் பல மாநிலங்களில், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில், நடைபெற்று வருகிறது. இந்துத்துவவாதிகளின் அராஜகத்தை எதிர்த்து களம் காண்பவர்களின் உடைமைகளே பெரும்பாலும் புல்டோசர்களால் பதம் பார்க்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் கடந்த நவம்பர் மாதம் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பு முஸ்லிம்களுக்கும் நீதியின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கும் நம்பிக்கையையும் நிம்மதியையும் அளிப்பதாக இருந்தது. இந்திய முஸ்லிம்கள் இத்தீர்ப்பை வெகுவாக வரவேற்று இனியும் இந்நாட்டில் புல்டோசர் அக்கிரமம் நிகழாது என்று நம்பிக்கையும் கொண்டனர்.

புல்டோசர் அக்கிரமித்தால் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி. ஆர். கவாய் மற்றும் கே. வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு , ஒரு நபர் குற்றவாளி என்று தீர்ப்பு அள்ளிக்கப்பட்டாலோ அல்லது குற்றம் சாட்டப்பட்டாலோ அதற்காக மட்டும் அவரின் வீட்டை அல்லது சொத்தை இடிப்பது சட்டத்திற்கு எதிரானது என்று தெளிவுபடுத்தினர். இடிப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன் உரிமையாளருக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்து அறிவிப்பு வழங்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள்,  சட்டவிரோத கட்டிடங்களை இடிப்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளையும் வெளியிட்டு நாடு முழுவதும் அதனை அமல்படுத்துமாறு உத்தரவிட்டனர்.

இத்தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன், அற்பக்  காரணங்களை கூறி முஸ்லிம்களின் வீடுகளையும் வணிக நிறுவனங்களையும் அதிகார வர்க்கம் இடித்து தரைமட்டமாக்கியது. ஏதேனும் ஒரு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் வீடு ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டது என்று உடனடியாக கூறி வேகமாக இடித்து தள்ளப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக தீர்ப்புக்கு பின்னரும் இதே நிலைதான் தொடர்கிறது.

பிப்ரவரி 23 அன்று துபாய் நகரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடினர். இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை வன்முறைக்கான ஆயுதமாக பல்லாண்டுகளாக பயன்படுத்தி வரும் இந்துத்துவ கும்பல் தற்போது அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவின் மால்வான் நகரத்தில் 15 வயது முஸ்லிம் சிறுவன் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பியதாக விஷ்வ இந்து பரிஷத்தை சார்ந்த சச்சின் வராத்கர் குற்றம்சாட்டி அச்சிறுவனை கும்பலாக சென்று தாக்கவும் செய்தார். அச்சிறுவன் தேச விரோத கோஷங்களை எழுப்பியதாக மால்வான் காவல்நிலையத்தில் சிறுவன் மற்றும் அவன் குடும்பத்தினர் மீது புகார் அளித்தார். உடனே களத்தில் குதித்த காவல்துறை, சிறுவனின் தாய் மற்றும் தந்தையை கைது செய்தது.

சிறுவனின் தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறுதினம் சகல் இந்து சமாஜ் என்ற அமைப்பு ஊர்வலம் நடத்தியது. அன்றைய தினமே, மால்வான் மாநகராட்சி அவர்களின் வீடு மற்றும் கடையை இடித்து தள்ளியது. அவர்களின் உறவினர் ஒருவரின் கடையும் புல்டோசரிடமிருந்து தப்பவில்லை.இவை அனைத்தும் உச்சநீதிமன்றத்தின் நவம்பர் தீர்ப்பிற்கு முற்றிலும் எதிரானது என்ற போதும் அதிகாரிகள் அது குறித்து எந்த கவலையும் கொள்ளவில்லை.

சட்டவிரோதமாக இடிப்பு நடத்தப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெறுவதற்கு உரிமையுடையவர்கள் ஆவர். மேலும், இதற்கு பொறுப்பான அதிகாரிகள் தங்கள் சொந்த செலவில் சொத்தை மீண்டும் கட்டி கொடுக்க வேண்டும் என்று  நீதிபதிகள் அந்த உத்தரவில் கூறியுள்ளனர். நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை மீறினால், அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் கடுமையான கண்டிப்புகளும் வழிகாட்டல்களும் இருந்த போதும் புல்டோசர் அராஜகம் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த சட்டவிரோத அராஜக நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாத வரை இந்த அநீதி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். நீதிமன்ற உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படாத காரணத்தால் அதிகாரிகளும் ஆளும் வர்க்கமும் எவ்வித தங்குதடையின்றி புல்டோசர்களை அப்பாவி மக்கள் மீது தொடர்ந்து ஏவி வருகின்றனர்.

இதனிடையே 2021 இல் உத்தரபிரதேசத்தில் புல்டோசர்களுக்கு தங்களின் சொத்துகளை பறிகொடுத்த ஆறு நபர்கள் தொடுத்த மேல் முறையீட்டு வழக்கில் ஏப்ரல் முதல் வாரத்தில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், இச்சம்பவம் நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதாக  குறிப்பிட்டது. தங்கும் இடத்தை பெறுவதற்கான உரிமை அரசியல் சாசனத்தின் 21வது பிரிவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்பதை மீண்டும் நினைவுபடுத்திய நீதிபதி ஓக்கா தலைமையிலான அமர்வு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற வழிகாட்டல்களை மீறி இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் இடிக்கப்பட்ட கட்டிடத்தை மீண்டும் கட்டுவதற்கும் உடைமைகள் மற்றும் நற்பெயரை இழந்ததற்கும் மாற்று இடத்திற்கு வாடகை கொடுத்திருந்தால் அதனை பெறுவதற்கும் தகுதியுடையவர்கள் என்று நவம்பர் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவுகளை மீறிய அதிகாரியிடம் இருந்து இத்தொகையை மீட்கலாம் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் மீண்டும் ஓரளவு நம்பிக்கை ஏற்படுத்தினாலும் சட்டத்தை மீறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள ஆட்சியாளர்களை தடுத்து நிறுத்துவதற்கு இத்தகைய தீர்ப்புகள் போதுமானதா என்ற சந்தேகமும் சேர்ந்து எழுகிறது. இந்த அநீதி முறையாக தடுத்து நிறுத்தப்படாத காரணத்தினால் இந்த வழிமுறையை பின்பற்றும் அரசாங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிகார வர்க்கத்தின் ஏவல் படையாக செயல்படும் அதிகாரிகள் மீது நீதிமன்ற உத்தரவுகளை மீறியதற்காக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தீர்ப்புகளை வழங்குவதோடு நின்றுவிடாமல் அதனை முறையாக செயல்படுத்தும் போதுதான் அக்கிரமக்கார ஆட்சியாளர்களுக்கு கடிவாளம் இட முடியும். இல்லையென்றால் தீர்ப்புகள் வெறும் காகிதத்தில் மட்டுமே நிலைத்திருக்கும்.

  • ரியாஸ்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW