தமிழின அழிப்புக்குப் பதிலீடாக சிறிலங்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையா? – தோழர் செந்தில்

11 Apr 2025

1987 ஆம் ஆண்டு இராஜீவ் – ஜெயவர்த்தனா உடன்படிக்கையின் போது தெருக்களில் இறங்கி அதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த ஜனதா விமுக்தி பெரமுனா, 37 ஆண்டுகளுக்குப் பிறகு அதேநாட்டின் தலைவருடன் பாதுகாப்பு சார்ந்த உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடும் தலைகீழ் நிலை ஏற்பட்டுள்ளது. அன்றைக்கு இராஜீவ் காந்தியின் பின் மண்டையில் அடிக்க முற்பட்ட கடற்படை வீரர் விஜிதரோஹன விஜேமுனி ஜேவிபியை சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்று பேசப்பட்டது. ஆனால், அதே ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் சிறிலங்கா அதிபருமான அநுர சிறிலங்காவின் அதியுயர் விருதான மித்ர விபூசனாவை இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு வழங்கி மகுடம் சூட்டியுள்ளார். இதுவொரு முரண்பாடாக தெரிந்தாலும் சிங்கள இராஜதந்திரத்தின் வளர்ச்சியும் தமிழினவழிப்பு நிகழ்ச்சிநிரலும் இந்திய விரிவாதிக்கத்தின் முயற்சியும் தொடர்பறாமல் காலந்தோறும் நடந்தேறி வருகிறது.

மூன்று நாள் பயணமாக இந்தியாவின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி சிறிலங்கா சென்று திரும்பியுள்ளார். மோடி கடந்த 11 ஆண்டுகளில் நான்காவது முறையாக சிறிலங்காவுக்குப் போயுள்ளார். அநுர தலைமையிலான புதிய அரசு அமைந்தப் பிறகு சிறிலங்காவுக்கு செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் அவர். அதுபோல். அநுர ஆட்சிக்கு வந்தவுடன், கடந்த திசம்பர் மாதம் தமது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு பயணம் போனார். அதன் பின்னர் சனவரியில் சீனாவுக்குப் பயணம் சென்றிருந்தார். 

இப்பயணத்தில் ஏழு உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டு, 5 திட்டங்கள் தொடங்கப்பட்டு, 4 அறிவிப்புகள் தரப்பட்டுள்ளன. அந்த ஏழு உடன்படிக்கைகளில் முக்கியமானது சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கையாகும் இதன்படி, கூட்டு இராணுவப் பயிற்சி, கடல் மற்றும் நிலத்தில் கூட்டுக் கண்காணிப்பு, ஆயுத உதவி உள்ளிட்டவை அடங்கும். இது 1987 இராஜீவ் – ஜெயவர்த்தன உடன்படிக்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. இதுவொரு மைல்கல்லான உடன்படிக்கையாக பேசப்பட்டு வருகிறது.

எந்த வகையிலும் யாராலும் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளை சிறிலங்காவின் மண்ணில் அனுமதிக்கமாட்டோம்  என்று அதிபர் அநுர  மோடியிடம் உறுதியளித்ததாக இந்திய வெளியுறவுத் துறை செய்தி வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, ” அநுர மோடியுடனான பேச்சுவார்த்தையின் போது, மண்ணில் மட்டுமின்றி சிறிலங்காவை சுற்றியுள்ள கடலிலும் இந்தியாவுக்கு எதிரான எதையும் அனுமதிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளார்” என்று ஊடகச் சந்திப்பில் கூறியுள்ளார்.

இரு நாட்டுப் பாதுகாப்பும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகவும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளதாகவும் அறிந்தேற்றுக் கொண்டு இவ்வுடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது என தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்துடன் சேர்ந்து இயற்கை துறைமுகமான திருகோணமலையை ஆற்றல் மையமாக மாற்றும் உடன்படிக்கையும் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது அம்பந்தோட்டாவில் சீனா கால்பதித்து இருப்பதை ஈடுசெய்வதற்கு ஏற்ற உடன்படிக்கை என்று இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த சனவரியில் அநுர சீனாவுக்கு சென்ற போது அம்பந்தோட்டாவில் 3.7 பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் உடன்படிக்கை ஏற்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.    

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு, கோவிட் நெருக்கடி, அண்மைய பொருளியல் நெருக்கடி என எல்லா கடினமான தருணங்களில் சிறிலங்கா மக்களுடன் நாங்கள் நின்றிருக்கிறோம் என்று மோடி பேசினார். குறிப்பாக இக்காலகட்டத்தில், இந்தியா 4.5 பில்லியர் டாலர்கள் கடன் கொடுத்திருக்கிறது. கடந்த ஆறு மாதத்தில் 100 மில்லியன் டாலர் கடனை நன்கொடையாக மாற்றியிருக்கிறது. இதுவும் சீனாவின் கடன் உதவியோடு போட்டிப் போட்டுக் கொண்டு இந்தியா மேற்கொள்ளும் முயற்சிதான். ஆனால், சிறிலங்காவின் 14 பில்லியன் டாலர் கடனில் சரி பாதிக்கும் மேல் சீனா கொடுத்திருப்பதாகும்.

இந்தியா தன்னுடைய உற்ற நண்பனுக்கு செய்துள்ள இந்த உதவிகளைக் குறிப்பிட்டுவிட்டு , நட்பு அதிகாரத்தில் பின்வரும் குறள் நினைவுக்கு வருவதாக மோடி சொல்லியுள்ளார்.

செயற்கரியா யாவுள் நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.

அதாவது , நட்பை உருவாக்கிக் கொள்வதைவிட பாதுகாப்புக்கு ஏற்ற செயல் வேறென்ன இருக்க முடியும் என்று சொல்லும் குறள்! அதாவது இந்தியாவின் தேசப் பாதுகாப்பை முன்னிட்டு சிறிலங்கா அரசுடன் ந்ட்பை உருவாக்கிக் கொள்வதோடு பொருந்திப் போகும் குறள்

இவை ஒருபுறமிருக்க, மோடி மலையகத் தமிழ் தலைவர்கள், ஈழத் தமிழர் தலைவர்க், சஜித் பிரேமதாசா, 1996 இல் உலகக் கோப்பை வென்ற சிறிலங்காவின் கிரிக்கெட் வீரர்களை போன்றோரை சந்தித்துள்ளார்.

2024 இல் தமிழக மீனவர்கள் 530 பேரும், 2025 இல் இதுவரை 137 பேரும் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியில் சிறிலங்கா பயணம் நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு கடந்த ஏப்ரல் 2 ஆம் நாள் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதே சட்டப்பேரவையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, இனவழிப்புக்கு உள்ளாகியுள்ள ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டுமானால் பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும், பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்போதுகூட அதே கோரிக்கைகளுடன் வடக்குகிழக்கில் படை வெளியேற்றம், மாகாணத் தேர்தல், பெளத்த விகாரை திணிப்பை கைவிடல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், திமுக அரசின் ஆலோசகர்கள் ஈழத் தமிழர் பிரச்சனையை முகாம் வாழ் ஏதிலிகள் பிரச்சனையாக சுருக்கி வருகின்றனர்.

இன்னொருபுறம், கடந்த மார்ச் 24 அன்று பிரித்தானிய அரசு சிறிலங்காவின் முன்னாள் படைத்தலைவர் சவேந்திர சில்வர், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணகோடா, ஜகத் ஜெயசூர்யா மற்றும் ஒட்டுக்குழு தலைவர் கருணா ஆகியோர் போரின் போது செய்த  மனித உரிமை மீறல்களை முன்னிட்டு பயணத் தடை விதித்துள்ளது.

மோடி ஈழத் தமிழர்களுடைய நீதிக்கான கோரிக்கைகள், தையிட்டி விகாரை, காணாமலாக்கப்பட்டோர் பிரச்சனை போன்ற உடனடி கோரிக்கைகள் பற்றியோ கச்சத்தீவு மீட்புப் பற்றியோ பேசவில்லை. எப்போதும் போல் மீனவர்கள் பிரச்சனையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்றும் தமிழர்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும், அரசமைப்பு சட்டத்தை செயல்படுத்தி, மாகாண சபை தேர்தல் நடத்த வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.

தமிழ் தலைவர்களுடனான சந்திப்பும் போதும் எப்போதும் போல பொத்தாம் பொதுவான சமத்துவம், கண்ணியமான வாழ்வு, நீதி ஆகியவற்றை சொல்லிவிட்டு வந்துள்ளார்.

மாகாணசபைகள் கடந்த 2019 செப்டம்பரில் கலைக்கப்பட்டுவிட்டன  கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தல் நடைபெறவில்லை.

இந்த பயணத்தில் கடந்த 37 ஆண்டுகளுக்குப் பிறகு பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்று இந்திய – சிறிலங்கா அரசுகளிடையே கையெழுத்திடப் பட்டுள்ளதை சிறப்பம்சமாக சொல்லி வருகின்றனர்.

அன்றைய இராஜீவ் ஜெயவர்த்தன உடன்படிக்கை தமிழீழ விடுதலைக்காக நடந்து கொண்டிந்த ஆயுத போராட்டப் பின்புலத்தில் உருவானது. போராளிகளை ஆயுதங்களை கீழே போடச் செய்து, வடக்கு கிழக்கு இணைப்பு, பதின்மூன்றாவது திருத்தம், மாகாண சபை உருவாக்கம் ஆகியவையே இவ்வுடன்படிக்கையின் பெறுபேறு. அந்த உடன்படிக்கையின் படிதான் இந்திய அமைதிப் படையும் சிறிலங்காவிற்குள் போய் தமிழர்களுக்கு எதிராக சண்டையிட்டு இரத்தம் சிந்தியது, உயிர் இழந்தது. கூடவே, தமிழ் மக்களுக்கு எதிராக துப்பாகியைத் திருப்பி, போர்க்குற்றங்களை செய்து தனது வரலாற்றில் தீராத கரைகயை ஏற்படுத்திக் கொண்டது.

இந்த பயணத்தின் போது, அமைதிப் படையில் உயிரிழந்தவர்களை போற்றும் வகையில் கொழும்பில் ஜெயவர்த்தனபுர கொட்டி என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள நினைவகத்திற்கு மோடி சென்றிருந்தார்.

இராஜீவ் – ஜெயவர்த்தன உடன்படிக்கையின் விளைவை இந்தியா இன்றைக்கு சரியான வகையில் எடைபோட்டிருந்தால் ஈழத் தமிழர்கள் தொடர்பில் சரியான கொள்கையை கடைபிடிக்கும் நிலைக்கு வந்திருக்கும்.

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க மேலாதிக்கப் பின்புலத்திலும் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டப் பின்புலத்திலும், ஜெயவர்த்தனா இராஜீவிடன் உடன்படிக்கை கண்டார். அந்த உடன்படிக்கையின் வழியாக இந்தியப் படையை தன் நாட்டுக்கு அழைத்தார். தமிழர்களையும் இந்தியாவையும் மோத விட்டார். பிரேமதாசா தமிழர்களுக்கு ஆயுதம் கொடுத்து இந்திய அமைதிப் படையுடனான சண்டைக்கு உதவினார். ஒருவழியாக இரத்தம் தோய்ந்த கரங்களுடன், பழி சுமந்தபடி தலைகுனிந்து திரும்பியது இந்தியப் படை. இந்திய அமைதிப் படைக்கு எதிராக ஜேவிபி தெருக்களில் இறங்கிப் போராடியது. வடக்குகிழக்கு இணைப்பை ரத்து செய்ய நீதிமன்றத்தில் முறையிட்டு வெற்றி பெற்றது. மாகாண சபைகள் இப்போது முடங்கிப் போயுள்ளன. மாகாண சபைகள் தேவையில்லை என்ற கொள்கை கொண்ட ஜேவிபி ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் பேரழிவை சந்தித்தும் 2 இலட்சத்திற்கும் மேலானோர் போரில் பலியாகியும் ,பல நாடுகளுக்கு ஏதிலிகளாக இடம்பெயர்ந்தும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்தும் வருகின்றனர். இப்போது போராளி இயக்கங்கள் எதுவும் களத்தில் இல்லை; ஆயுதப் போராட்டமும் இந்தியாவின் உதவியுடன் அழிக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையே, தென்னிலங்கையில் உள்ள அம்பந்தோட்டாவில் ஒரு துறைமுகத்தைப் பெற்றுக் கொண்டு 99 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்து இந்தியப் பெருங்கடலில் குந்திக் கொண்டிருக்கிறது சீனா. எனவே, இறுதிக் கணக்கு என்னவென்றால் தமிழர்களுக்கு இனவழிப்பு, வடக்குகிழக்கு இணைப்பும் இல்லை, மாகாண சபையும் இல்லை, இந்திய அமைதிப்படைக்கு நினைவகம், சீனாவுக்கு அம்பந்தோட்டா!

ஈழத் தமிழர்களின் தேசிய இருப்பையும் வாழ்வையும் தேசிய சுயநிர்ணய உரிமையையும் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலையும் வரலாற்று வழியில் சிங்களர் – தமிழர் இடையே வேரூன்றியுள்ள ஆழமான பகையையும் புரிந்து கொள்ளத் தவறுகிறது இந்திய அரசு!

இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்றும் மலையகத் தமிழர்கள் என்றும் அறியப்படும் மத்திய இலங்கை வாழ் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து, இந்தியாவுக்கு விரட்டியடிக்கும் ஒப்பந்தம் போட்டு ஒருவழியாக அவர்களை தேசிய சிறுபான்மையினர் என்ற் இடத்திற்கு தள்ளியுள்ளது சிங்கள பெளத்த பேரினவாதம். இவற்றை நடக்காமல் தடுத்திருந்தால் இன்று சிறிலங்காவில் இரண்டாவது பெரிய இனமாக மலையகத் தமிழர்கள் இருந்திருப்பார்கள். இவ்வளவு பெரிய நிலப்பரப்பையும் மக்கள் தொகையையும் கொண்ட இந்தியா தன் வம்சாவழி மக்களாக அறியப்படும் மலையகத் தமிழர்களைக் காக்கத் தவறியது மாபெரும் வரலாற்றுப் பிழையாகும்.

இன்றைக்கு கையெழுத்தாகியுள்ள பாதுகாப்பு உடன்படிக்கை எதன் மேல் கட்டப்பட்டுள்ளது? அன்று ஆயுதப் போராட்டத்தின் பின்புலத்தில் உடன்படிக்கை கண்டது போல் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புக்கு துணை செய்தும், இனவழிப்பாளர்களைப் பாதுகாப்பதற்கு உதவி செய்தும் மீண்டும் ஈழத் தமிழர்களைப் பேரப் பொருளாக்கி உடன்படிக்கை கண்டுள்ளது இந்தியா. ஆனால், சிறிலங்காவைப் பொருத்தவரை முள்ளிய்வாக்கால் என்பது கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்புக்கான தடைகளை அகற்றிவிட்ட நிகழ்வாகும். முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் இன்னொரு அத்தியாத்தின் தொடக்க்கம். மலையகத் தமிழர்களை உதிரிகளாக மாற்றியது போல் வடக்கு கிழக்கில் ஈழத் தமிழர்களை உதிரியாக்குவதுதான் சிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் இலக்காகும்.

நுனி மரத்தில் இருந்து அடிமரத்தை வெட்டுவது போல், மலையகத் தமிழர்களைக் காக்கத் தவறிய இந்திய அரசு, ஈழத் தமிழர்களைக் காப்பதிலும் கடமை தவறிக் கொண்டிருக்கிறது.

ஈழத் தமிழர்கள் சிறிலங்காவில் இல்லையென்றால் இந்தியா அங்கே தலையிடுவதற்கு வழியில்லாமல் போய்விடும். கிரீமியாவில் ரசியர்கள் இருப்பதுதான் ரசியா அங்கே தலையிடவும் காசுமீரில் இசுலாமியர்கள் இருப்பதுதான் பாகிஸ்தான் இந்தியப் பிரச்சனையில் தலையிடவும் சைப்ரசில் துருக்கியர்கள் இருப்பது தான் துருக்கி தலையிடவும் வழிவகுத்துக் கொண்டிருக்கிறது.

பாக் நீரிணையில் எந்த வெளிநாடும் வந்துவிடக் கூடாது என்றால் ஈழத் தமிழர்களின் இறைமை மீட்பின் வழியாகத் தான் அதை இந்திய அரசு உறுதிசெய்ய முடியும். தேசிய இனப் பிரச்சனைக்கு சனநாயக வகையில் தீர்வு காணாமல் இருந்தால் பாக் நீரிணை வல்லரசுகளின் வேட்டைக் காடாகத் தான் தொடரும். தமிழ் இனவழிப்புக்கு துணை போவது பாக் நீரிணையைப் அமைதி தவழும் இடமாக இருக்குமா?  தமிழினம் அழிக்கப்பட்டு சிறிலங்கா முழுக்க முழுக்க சிங்களமயமானால் அது பாக் நீரிணைக்கு இந்தப் பக்கம் இருக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுடன் தீராப் பகையை இந்திய அரசுக்கு ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறோம். இது குறித்து இந்திய அரசு முடிவு செய்ய வேண்டிய காலம் ஒன்று வரும்.

எப்போதெல்லாம் இந்திய நிலப்பரப்பில் பேரரசுகள் தோற்றம் பெறுகிறதோ அப்போதெல்லாம் அது கடல் கடந்து தம்மீது படர்கிறது என்ற வரலாற்றிலிருந்து சிங்கள மனம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. அதன் வழியே உருப்பெற்றதுதான் தமிழினப் பகையும் ஆகும். எனவே, தனது அண்டை நாட்டைப் பகையாகவும் அண்டை நாட்டின் அண்டை நாட்டை நட்பாகவும் பார்க்கும் இயல்புக்கு ஏற்ப எப்போதும் இந்தியாவை அச்சுறுத்தலாகப் பார்த்து அந்தந்த காலத்திற்கு ஏற்ப இப்பிராந்தியத்திற்கு வெளியே நண்பர்களைப் பேணிக் கொள்ளும் அரசதந்திரக் கலையில் கைதேர்ந்தது சிங்கள பெளத்தப் பேரினவாதம். ஒரு காலத்தில் அமெரிக்காவோடு நட்பு ! இன்று சீனாவுடன்  நட்பு.

இந்தியாவுடன் நட்பு காட்டுவது போல் நடித்து ஒவ்வொரு கட்டத்திலும் தமிழர்களின் இருப்பை அழித்துவரும் வேலையைத்தான் சிங்கள பெளத்த பேரினவாதம் செய்து வருகிறது.

தமிழினவழிப்பு செய்யும் சிங்கள அரசுடன் நட்பு பாராட்டும் இந்திய அரசு, தமிழ்நாட்டு தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை மதிப்பதற்கு தயாராக இல்லை.

ஈழத் தமிழர் தம்மை ஒன்றுதிரட்டிக் கொண்டு ஒரு தரப்பாக உருத்திரள வேண்டும். தமிழ்நாடு ஈழத் தமிழருக்கு தோள் கொடுக்க வேண்டும்.

தமிழ்த் தரப்பு தமது அடிப்படை கோரிக்கைகளுக்காக மக்களைத் திரட்டிப் போராடாவிட்டால் அவர்அவர் நிகழ்ச்சிநிரலுக்கு இடையே அழிந்து போவது தொடர்கதையாகி போகும்.

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி, சிங்களப் படை வெளியேற்றம், பெளத்த விகாரைகள் திணிப்பு எதிர்ப்பு, காணிகள் மீட்பு, மாகாண சபை தேர்தல் ஆகிய கோரிக்கைகளுக்கு போராடுவதன் மூலம் தான் சிங்கள பெளத்தப் பேரினவாதத்தை அம்பலப்படுத்த முடியும். வலிமையற்ற ஒருவற்கு யாரும் அரசியல் தீர்வை அள்ளித்தர போவதில்லை. சமஷ்டி யாப்பு என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. சிவப்புத் தோல் போர்த்திய நரிதான் ஜேவிபி என உள்நாடும் வெளிநாடும் அறியச் செய்வதற்கு ஒரே வழி சரியான கோரிக்கைகளுக்குப் போராடுவதுதான். அதன் மூலம், இந்திய அரசுடன் தமது நலன்களை முன்னிறுத்திப் பேசுவதற்கான பேர வலிமையை ஈழத் தமிழர்கள் பெற முடியும்.

மோடியின் பயணமும் அவர் தலையில் அநுராவால் சூட்டப்பட்ட ஈழத் தமிழரின் இரத்தம் தோய்ந்த மகுடமும் சொல்லும் செய்தி இதுதான். 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW