அதிமுக – பாசக கூட்டணியும் தமிழ்நாடு எதிர்கொள்ளும் சவாலும் – தோழர் பாலன்

05 Apr 2025

ஒன்றியத்தில் ஆளூம் பாசக அந்த அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கடும் முயற்சி எடுக்கிறது. இந்த முயற்சியின் பயனாய்தான், ஒடிசா, மராட்டியம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியோ அல்லது எதிர்க்கட்சி என்ற நிலையையோ அடைந்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாசக பின்னடைவை சந்தித்து இருந்தது என்ற நிலையில் இருந்து  அரியானா, ஜார்க்கண்ட், சம்மு காசுமீர், மராட்டியம், தில்லி சட்டப் பேரவைகளுக்கான தேர்தலில் வெற்றிகளை ஈட்டியதன் மூலம் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதாக மதிப்பிடப்படுகிறது.  2025 இலும் 2026 இலும் நடககவுள்ள பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்கத்திற்கான சட்டப்பேரவை தேர்தல்களுக்கு பாசக அணியமாகி வருகிறது. இதில் தமிழ்நாடு பாசகவுக்கு சவால் விடக்கூடிய மாநிலமாக இருந்து வருகிறது.

கடந்த 11 ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் கால் பதிப்பதற்கு கடும் முயற்சி செய்துவருகிறது பாசக.  அதில் குறிப்பிடத்தக்க அளவில் பாசகவால் வெற்றிபெற முடியவில்லை. அதேநேரத்தில், தனது வாக்கு விழுக்காட்டை அதிகரித்துள்ளது. இந்த சூழலில்தான், 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை தமது கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான காய்களை பாசக நகர்த்தியுள்ளது.

2026 சட்டப்பேரவை தேர்தலையும் அதற்கென அமையவிருக்கும் கூட்டணியையும் வழக்கமான ஒன்றாகப் பார்த்துவிடக் கூடாது. பாசக வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளுமாயின் அது கடந்த 70 ஆண்டுகாலமாக தமிழ்நாடு பயணித்து வந்த பாதையை திசை திருப்புவதற்கான அச்சாரமாக அமைந்துவிடும். எனவே, தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டோர் தமக்குள் இருக்கும் உள்முரண்பாடுகளையும் பாசகவுடனான முரண்பாட்டையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

2026 சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பாசகவுக்கு இரண்டு விருப்பங்கள் இருக்கின்றன. ஒன்று அதிமுகவை தேசிய சனநாயக கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும். மற்றொன்று அதிமுக – தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைந்துவிடக் கூடாது இவ்விரண்டையும் தேர்தலுக்கான அரசியல் வழிமுறையாகப் பார்க்கிறார்கள்.   

பாசக வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு உத்திகளைக் கடைபிடித்து வந்துள்ளது. அந்த உத்திகள் யாவும் தமக்கென்று ஒரு வாக்குவங்கியை உருவாக்கிக் கொள்வதும் அம்மாநிலத்தின் முதன்மை சக்திகளோடு கூட்டணி வைத்து அதிகாரத்தில் பங்கெடுப்பதும் பின்னர் படிப்படியாக முதன்மை சக்தியாக எழுந்து வருவதும் ஆகிய நோக்கங்களைக்க் கொண்டதாக அமைகின்றன. மராட்டியத்தில் சிவசேனாவுடன் கூட்டணி வைத்தும் பீகாரில் நிதிஷ்குமாரோடு கூட்டணி வைத்தும் பாசக வளர்ந்து வந்த விதத்தை ஓர் எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் என்ன வழிமுறையை முன்னெடுக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அந்த வழிமுறை என்பது மாறாத ஒன்றல்ல. ஒவ்வொரு குறிப்பிட்ட அரசியல் சூழலுக்கு ஏற்ப வழிமுறையைத் தீர்மானித்து செயல்படுத்துகின்றது. ஆனால, மேற்சொன்ன நோக்கம் என்பது மாறுவதில்லை. தமிழ்நாட்டிலும் கடந்த 11 ஆண்டுகளாக பாசக இதே நோக்கத்திற்காக செயல்பட்டு வருகின்றது. அதற்கேற்ப தமிழ்நாட்டில் வெவ்வேறு கதையாடலைக் கட்டமைத்தும் வருகின்றது. நோட்டாவுடன் போட்டியிடும் கட்சி, கட்டுப்பணம்கூட வாங்க முடியாத கட்சி, குறைந்த வாக்கு வங்கி கொண்ட கட்சி என்றெல்லாம் பேசப்பட்டு வந்த பாசக, இன்றைக்கு அதிமுகவைக் கரை சேர்க்கப் போகும் கட்சி என்றும் அதிமுகவுக்கு இருப்பது போலவே தனக்கென்றும் தனித்த வாக்குவங்கியைக் கொண்ட கட்சி என்றும் ஒரு கருத்தைக் கட்டமைத்து வருகின்றனர்.

தொடக்கம் முதல் பாசகவின் அனைத்து உத்திகளின் மையம் என்பது அதிமுகவை சிதைப்பதும் அவ்விடத்தைப் கைப்பற்றுவதும் ஆகும்.

ஜெயலலிதா இறந்தவுடன் சசிகலா எதிர் ஓ.பன்னீர் செல்வம் என்ற முரணைக் கொண்டுவந்து, ஓபிஎஸ் ஐ  கையில் எடுத்து அதிமுகவைக் கைப்பாவையாக்க முயன்றனர். அது தோல்வி அடைந்தவுடன் சசிகலாவை சிறைக்கு அனுப்பிவிட்டு எடப்பாடி பழனிச்சாமியைக் கையில் எடுக்க முடியுமா? என்று பார்த்தனர். முன்பு யாரை வெளியேற்றினார்களோ இப்போது அவர்களை (சசிகலா, ஓ.பி.எஸ். டிடிவி) கூட்டுச் சேர்த்துக் கொண்டு, எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்தனர். செங்கோட்டையனைக் கையில் வைத்துக் கொண்டு அவருக்கு ’Y’ பிரிவு பாதுகாப்பு கொடுப்பது, எட்ப்பாடி பழனிச்சாமியை அடிபணியச் செய்வது என்ற அணுகுமுறையைக் கையில் எடுக்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா, கருணாநிதிக்குப் பின்னான அரசியல் சூழலில், முதல் அல்லது இரண்டாவது இடத்தில் இருக்கும் அதிமுகவைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கிலேயே பாசகவின் அனைத்து உத்திகளும் இருந்து வருகின்றன..  மரபான பிரித்தாளும் உத்தியைக் கடைப்பிடிக்கிறது.

அதிமுகவுக்குள்ளான அதிகாரப் போட்டியை முக்குலத்தோர் எதிர் கவுண்டர் அதிகாரப் போட்டியாக உருவம் கொடுப்பதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. உண்மையில் அனைத்து வட்டாரங்களிலும் அனைத்துப் பிரிவு மக்களிடமும் அடித்தளம் கொண்ட அதிமுக, கவுண்டர் சாதியின் கட்டுப்பாட்டுக்குள் போய் விட்டதாக முக்குலத்தோர் கருதும் அளவுக்கான நிலைமையை பாசக தோற்றுவித்துள்ளது. இது ஒருபக்கம் அதிமுகவுக்கு இருக்கும் முக்குலத்து மக்களின் சமூக அடித்தளத்தை இழக்கச் செய்கிறது; இன்னொருபுறம் அதிமுகவுக்குள் இருக்கும் அதிகார மையங்களையும் ஆட்டங் காணச் செய்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட் ஊடகங்களின் வாயிலாக 25% வாக்குகளைப் பெறுவார்கள் என்ற கருத்தைக் கட்டமைத்து இரண்டாவது  பெரிய கட்சி என்ற அளவுக்குப் பேச வைத்தனர். இன்றைய சூழலில் கருத்துருவாக்கம் என்பது வெறுமனே கள நிலைமையைப் பிரதிபலிப்பதாக மட்டும் இருப்பதில்லை, கள நிலைமை மீது ஊர்ந்து அதை மாற்றியமைக்கக் கூடியதாகவும் இருக்கிறது. கருத்துக் கணிப்பாக இல்லாமல் கருத்து திணிப்பாக அது மாறிவிடுகிறது.

தில்லி அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு, அகில இந்திய ஊடகங்களின் வழியாக கருத்துருவாக்கம் செய்து கொண்டு தமிழ்நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தப் பார்க்கின்றனர். அதிமுகவுடன் கூட்டணிக்குப் போகவிருந்த சிறுசிறு கட்சிகளை ஒன்றிய அரசு அதிகாரத்தின் வழியாக  மிரட்டி, தமது  கூட்டணிக்குள் கொண்டு வந்தனர். இதுவும்கூட அதிமுகவின் வாக்குகள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறைவதற்கு காரணமாக அமைந்தது.

அண்ணாமலை போன்ற ஒட்டுண்ணி, இறக்குமதி செய்யப்பட்ட நபர்களை நிலைநிறுத்துவதற்கு சாதியைப் பயன்படுத்துவதோடு ஒன்றிய அரசதிகாரத்தையும் பயன்படுத்துகின்றனர். கொங்கு மண்டலத்தில் பாசக செல்வாக்கு செலுத்துவதற்கு தடையாக இருப்பவராக கருதப்படும் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி சிறைக்கு அனுப்பினார்கள். இதன்மூலம் கொங்குப் பகுதியில் தனிப்பெரும் அடையாளமாக அண்ணாமலையை நிலைநிறுத்தப் பார்க்கின்றனர்.

மாநிலக் கட்சிகளில் மாநில ஆட்சி அதிகாரத்தின் வழியாக மாநிலப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தியும் ஊழல் செய்தும் பெரும் பணத்தை சுருட்டியுள்ளனர்.  எல்லா மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு மோடி – ஷா சிறுகும்பல் அமலாக்கத்துறையையும் வருவாய் துறையையும் பயன்படுத்துகிறது.  

இத்தகைய சூழமைவில்தான் நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு ஏற்பட்டுள்ளது. அவர் ஒரு புது வரவு. மாநில் ஆட்சியில் உள்ள திமுகவுக்கு எதிரான அதிருப்தி என்பது இயல்பானது. தமிழ்நாட்டில் நிலவும் மாநிலக் கட்சிகளின் செல்வாக்கை உடைத்து அனைத்திந்திய கட்சியான பாசக செல்வாக்கு செலுத்துவதற்கு கடந்த 11 ஆண்டுகாலமாக தீவிரமாக முயன்றுவரும் நிலையில், திமுக அர்சுக்கு எதிரான அதிருப்தியை அறுவடை செய்யும் வகையில் அதிமுக – தவெக ,- நாம் தமிழர் கூட்டணி அமையுமானால் அது பாசகவின் கனவைப் புதைத்துவிடும் இது அடுத்த சில பத்தாண்டுகளுக்கு ஏனும் மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு நீடிக்க வழிவகுத்துவிடும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகவும் தேர்தல் கூட்டனியாகவும் இது அமைந்துவிடும்.

இன்னொருபுறம் பாசகவின் நோக்கம் என்பது மேற்சொன்ன கூட்டணி எதுவும் உருவாகிவிடக் கூடாது என்பதே ஆகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு சதி வேலைகள் மூலம் பெற்ற வாக்கு விழுக்காட்டை உயர்த்த வேண்டும், அதிமுகவோடு உறவாடியும் மேலே ஏறி உட்கார்ந்தும் காலப்போக்கில் அதிமுகவின் இடத்தைப் பிடிக்க நினைக்கிறது. எனவே, இந்த சட்டப்பேரவை தேர்தல் என்பது பாசக அமைக்கக்கூடிய கூட்டணியைப் பொறுத்து தமிழ்நாட்டில் ஓர் அனைத்திந்திய கட்சி கால் பதிப்பதற்கான தேர்தலாக மாறிப் போகக் கூடும்.

திமுக ஆட்சிக்கு எதிரான மக்களின் கோரிக்கைகளின் வழியாகவும் அதிருப்தியை முன்வைத்து மக்களின் மனங்களை வெல்வதன் மூலமாகவும் தமிழ்நாட்டில் ஓரு புதிய அர்சியல் சக்தியாக பாசக வளருமாயின் அது வேறு. மாறாக ஓன்றிய ஆட்சி அதிகாரத்தின் வழியாக அமலாக்கத் துறை, வருவாய் துறை, அளவற்ற பணம், ஊடக பலம்,  தமிழ்நாட்டின் அதிகார மையங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது ஆகியவற்றின் மூலமாக பாசக தமிழ்நாட்டில் கால் பதிக்க நினைக்கிறது.

தமிழ்நாட்டில் மூன்றாவது அணி என்ற முழக்கம் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. மக்களுடைய அரசியல் மனநிலை மாநில அரசின் கொள்கைகள், சட்டத் திட்டங்கள், நிர்வாகத் திறன் ஆகியவற்றைச் சுற்றி தான் முதன்மையாக இருக்கிறது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியை எதிர்த்து அரசியல் செய்யும்போது ஓரளவுக்கு வாக்குகளையும் பெறுகின்றன.

மூன்றாவது அணி என்ற நோக்கில் கடந்த சில பத்தாண்டுகளாகவே தமிழ்நாட்டில் பல்வேறு முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அணி அல்லது கட்சி என்று தான் அவை உருப்பெறுகின்றன.

இப்போது பாசக  ஒன்றிய ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிமுகவுடன் கூட்டணி வைப்பதன் மூலம் அதிமுக முதுகில் ஏறித் தன்னை தமிழ்நாட்டின்  மூன்றாவது பெரிய கட்சியாக மாற்றிக் கொள்ள விரும்புகிறது. அதை தொடர்ந்து அதிமுகவைக் கரைத்து படிப்படியாக எதிர்க்கட்சி என்ற இடத்திற்கு நகர்வதுதான் அதன் திட்டம்.

தமிழ்நாட்டு சட்டப்பேரவை தேர்தலின் மூலம் தமிழ்நாட்டிற்குள் அரசியல் அதிகாரத்தைப் பிடிப்பதற்கான இந்த சதுரங்க ஆட்டத்திலே, ஒவ்வொரு கட்சிக்கும் ஓர் இலக்கு இருக்கிறது. ஆனால், நாம் எழுப்ப வேண்டிய கேள்வி – இந்த அதிகாரப் போட்டி தமிழ்நாட்டின் எதிர்காலத்தில் என்ன தாக்கத்தை செலுத்தப் போகிறது? என்பதுதான். அதற்கு தமிழ்நாட்டில் உள்ள சனநாயக ஆற்றல்கள் எத்தகைய தலையீட்டை செய்யப் போகின்றன?

பாசிச எதிர்ப்பில் அக்கறை கொண்டவர்களின் முதன்மை எதிரி பாசக. முதன்மை கவலை தமிழ்நாட்டில் பாசக காலூன்றிவிடக் கூடாது என்பதுதான். பாசகவை தமிழ்நாட்டு அரசியலில் தனிமைப்படுத்துவதுதான் செயலுத்தியாக இருக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை போலவே பாசகவைத் தனிமைப்படுத்தும் வகையிலான கூட்டணிகள் உருப்பெற வேண்டும் என்பதிலும் பாசிச எதிர்ப்பு அணிகளுக்கு அக்க்கறை வேண்டும்.

எதிர்க்கட்சி கூட்டணி உருவாவதிலும் பாசக தனிமைப்படுவதற்கு ஏற்ற கருத்துருவாக்கத்தை மேற்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் பாசக ஒரு வலுவான கட்சியாக இல்லாவிட்டாலும் உறுதியற்ற நிலையில் இருந்தாலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பெற்ற வாக்குகளை வைத்துக் கொண்டு பாசகவின் பலம் பற்றிய மிகையான கருத்துருவாக்கத்தை செய்கின்றனர். 9-4-2025 தேதியிட்ட துக்ளத் வார இதழில், பாசக இல்லாமல் அதிமுக வெற்றி பெறவே முடியாது என்ற பொருள்பட பாசக – அதிமுக கூட்டணிக்கு தூபம் போடுகிறார் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி. கூடவே தவெக – அதிமுக கூட்டணி உருவாகக் கூடாது என்பதற்கேற்ற கருத்துருவாக்கத்தையும் அவர்  செய்கிறார்.

  சனநாயக ஆற்றல்களிடையே திமுக ஆட்சி எதிர்ப்பு பேசும் கட்சிகளை பீ – டீம் என பொத்தாம் பொதுவாக சொல்கின்றனர். மாறாக எதிர்க்கட்சி கூட்டணி அமைவதிலும் பாசக முற்றாக தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் அழுத்தம் கொடுக்க வேண்டும்; கருத்துருவாக்கம் செய்ய வேண்டும்.

 தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் வஃபு வாரிய சட்டத்திருத்த எதிர்ப்புத் தீர்மானம், பொதுசிவில் சட்ட எதிர்ப்பு, ஒரே நாடு , ஒரே தேர்தல் எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பு, நீட் விலக்கு சட்ட வரைவுகள்  என மாநில உரிமை, சிறுபான்மையினர் நலன் சார்ந்த தீர்மானங்கள் இயற்ற்ப்படும் போது பாசகவை தவிர அனைத்துக் கட்சிகளும் ஆதரித்து நிற்கின்றன. இதை கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும்.

பாசக சட்டப்பேரவையில் தனிமைப்பட்டு இருக்கும் அதேவேளையில் தேர்தலில் பெறக் கூடிய வாக்குகளை அதிகரிப்பதன் மூலம் தன்னை வளர்த்து கொள்ள பார்க்கிறது. இதை மட்டுப்படுத்துவதற்கு தேவையான முயற்சிகளை செய்வதற்கு மாறாக ஆளூங் கட்சி – எதிர்க்கட்சி கூட்டணிகளின் அதிகாரப் போட்டிக்கும் அரசியல் சதுரங்க ஆட்டத்திற்கும்  பலியாகி தமிழ்நாட்டின் நலனை பலியிடுவதற்கு அணியமாகி விடுகின்றனர். இது ஓர் எதிர்மறையான நிலை ஆகும்.

தேர்தலைப் பொருத்தவரை பாசகவை தனிமைப்படுத்தி ஆளுங் கட்சி எதிர்க்கட்சி கூட்டணியில் அவர்கள் இல்லாத நிலைமையை உருவாக்க வேண்டும்.. பாசக தமிழ்நாட்டில் ஓர் இந்துத்துவ வாக்கு வங்கி உருவாகிக் கொண்டிருப்பதாக பாசக சொல்கிறது. அப்படி ஒன்று உருவானால் அதற்கு எதிராகப் போராடியாக வேண்டும். தமிழ்நாட்டு நலனை குஜராத்திகளுக்கு காட்டிக் கொடுக்கும் கட்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில விலை போனவர்கள் இருப்பது என்பது வேறு. அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால், அவர்களே அதிமுகவின் முதுகில் ஏறி உலா வந்தார்கள் என்றால் இன்னும் வேகமாக வளர்ச்சி அடைந்து தமிழ்நாட்டின் அடிபப்டை அரசியலுக்கு சவால் விடும் நிலைக்கு வருவார்கள்.

 எடப்பாடி பழனிச்சாமி பாசகவின் அடிமை போல் தன்னைக் காட்டிக்கொண்டாலும் கடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவை பெரிய கட்சியாக அங்கீகரித்து பாசகவை கடைசியாகத் தான் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பாசகவுடன் சமரசம் செய்து கொள்ளும் கட்சியாக அதிமுக, பாமக இருப்பது வேறு, ஆனால், பாசகவே நேரடியாக தமிழ்நாட்டில் வேர்விட்டு கிளை பரப்புவது என்பது வேறு.

இன்றைக்கு வெறும் 4 சட்டப்பேரவை உறுப்பினரையும் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற கூடுதலான வாக்கு விழுக்காட்டையும் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு முனையாக மாற முயல்வதும், எல்லாவற்றையும் நாங்கள் மாற்றப் போகிறோம் என்று மிகைப்படுத்துவது, ஆளுநர் வழியாக இரட்டை ஆட்சி நடத்துவதும் சட்ட வரைவுகளை கிடப்பில் போடுவதும் என  ஏராளமான அட்டூழியங்களை தமிழ்நாட்டில் செய்து கொண்டிருக்கிறது பாசக. இன்னும் கூடுதலாக பலம்பெறும் வகையில், நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்பது 40 அல்லது 50 சட்டப்பேரவை உறுப்பினராக மாறிப்போனால் என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளும் பொதுவில் ஏற்றுக் கொண்ட் கொள்கைகளைக்கூட காப்பாற்ற முடியாத நிலைக்கு போய்விடுவோம்.

தமிழ்நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் ஒரு கருத்துருவாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தி, தேர்தல் அரசிய்லில் பாசகவுடன் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு போக முடியாது என்ற எதிர்ப்பு அலையை உருவாக்குவதன் மூலம் தேர்தலில் மாநிலக் க்ட்சிகள் பாசகவைப் பின்தொடராமல் தடுக்க முடியும்; பாசக வலுப்பெறுவதைத் தடுக்க முடியும்.

பாசகவுக்கு எதிரான முதன்மை போராட்டத்தில், வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதைப் போலவே யார் எதிர்க்கட்சியின் இடத்தில் இருக்க வேண்டும், யார் முற்றாக துடைத்தெறியப்பட வேண்டும் என்பதும் முக்கியத்துவம் உடையதே!

எல்லா சாலைகளும் ரோம் நகரத்தை நோக்கிச் செல்கிறது என்பது போல் எல்லா அரசியல் விவாதங்களும் எல்லா சமூகப் பிரிவினரின் விவாதக் கருத்துகளும் எல்லா அரசியல் கட்சிகளின் நகர்வுகளும் 2026 சட்டப்பேரவை தேர்தலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன.

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பதில் அக்கறை கொண்ட சனநாயக ஆற்றல்கள் அனைவரும் சதித்திட்டங்களின் மூலம் தேர்தல் களத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பாசகவைத் தனிமைப்படுத்தும் வகையில் அரசியல் உத்தியை முன்னெடுக்க முன்வர வேண்டும்.

தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்குள் இன்று இருக்கும் நான்கு பாசக உறுப்பினர்களும் விரட்டியடிக்கப்பட்டு சட்டப்பேரவையை துப்புரப்படுத்த வேண்டும்;  பாச்கவினர் இல்லாத சட்டப்பேரவையாக அதை மாற்றிட வேண்டும். .

  •  தோழர் பாலன்

			
		
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW