அத்திப் பூவே மகளே அனிதா!

07 May 2018

அத்திப் பூவே மகளே அனிதா
ஒத்தப் பூவா பூத்த தாயி
மெத்தப் படிச்சு வந்த தாயி
சத்தமா சட்டமும் நீ பேச கோர்ட்டு நாட்டு போன தாயி
செத்த பயலுக ஏமாத்துச்சுன்னு
செத்துத் தான் போன தாயி

கல்லும் கரைஞ்சு போகும் கண்ணுமணி ஒன்ன பாத்தா
நெல்லும் பூத்துப்போகும் நெறஞ்ச நெஞ்சு பூரிச்சுப்போகும்
புல்லுருவி மகராசன் போட்ட நாடகத்துல
நல்ல தாயி ஒன் உசுர பறிச்சதென்ன

ஆசை ஆசையாய் பெத்த மகன்
ஆளாகி வந்துடும்னு
காட்ட விட்டு கழனிய விட்டு கட்டுன வீட்டயும் சேர்த்து விட்டு
கண்ணு முழிச்சு படிக்கவச்சு கூட இருந்த சாமி
எர்ணாகுளம் போகணும்னு கெடச்ச ரயில்ல நின்னுகிட்டு
சக்கரைக் கட்டி டாக்டராகி சக்கரை நோய தீக்குமுண்டு
உண்ணாம உறங்காம உமிரு கூட எறங்காம
நீட்டை எழுத உள்ள விட்டுட்டு
நீட்டி நிமிந்து படுத்த மனுசன்
எந்திரிக்கவே இல்லயப்பா

எங்க சாமி ஏன் மகள்னு கேட்ட சொல்லு தீருமுன்னே
எங்க சாமி எங்கப்பன்னு கேக்குதப்பா பச்சப் பிஞ்சு
காசா கேட்டோம் பணமா கேட்டோம்
காடா கேட்டோம் மலையா கேட்டோம்
படிக்கத் தான இடம் கேட்டோம்

இல்லாத சாமியா கண்ண தொறக்கப் போகுது
கோட்டச் சாமி கோர்ட்டுச் சாமி எதிரா திரும்புது
நாட்டுச் சாமி என் சனமே
நாயம் ஒன்னு இல்லயா
உசுரக் கொடுத்து போன சாமிக
உணர்வ உசுப்பி போகலயா
எந்திரிங்க எந்திரிங்க
சுடுகாடா போகுமுன்ன எந்திரிங்க எந்திரிங்க

 

– ரபீக் ராஜா

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW