விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை சாதி ரீதியாக இழிவுபடுத்திய எச். ராஜாவை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்!
![](https://peoplesfront.in/wp-content/uploads/2018/12/thiruma.jpg)
சாதி ஒழிப்பு முன்னணியின் கண்டன அறிக்கை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவன் அவர்களை “அவர் தொட்ட கட்சியை யாரும் தொட மாட்டார்கள்“ என சாதிய வன்மத்துடனும் வெறுப்புடனும் மிக மோசமாக திட்டமிட்டு பேசிய பாஜகவின் தேசியச் செயலர் எச்.ராஜா வை, தமிழக அரசு வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் உடனடியாக கைதுசெய்ய வேண்டும்.
தமிழகத்தில் இஸ்லாமியர், கிறித்தவர், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வன்முறையை ஏவும் வகையில் மதவெறியுடன் பேசிவருபவர்தான் எச்.ராஜா. “திரிபுராவில் லெனின் சிலையை தகர்த்தோம். தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்போம்“ என ஆணவத்திமிருடன் பேசியவர் எச்.ராஜா. அண்ணல் அம்பேத்கரின் சிலைகளை உடைப்பதும் மைப்பூசி அவமதிப்பதுமான வன்முறையைத் தூண்டிவருபவர் எச்.ராஜா. இதன் விளைவாக ஆர்எஸ்எஸ், விஎச்பி, பசுபாதுகாப்பு குண்டர்கள், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற காவி கும்பல் சமூக நல்லிணக்கத்தை, சமூகப் பதற்றத்தை உண்டாக்கிவருவது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. “இந்துக்கள் எல்லாம் ஒன்றிணைவோம்“ என மக்களைப் பிளவுபடுத்தி மதவெறி அரசியலை பரப்பி வருவதில் ஆபத்தான கட்சியாக பாஜகவும் அதன் தேசிய செயலர் எச்.ராஜாவும் ஆர்எஸ்எஸ் கும்பலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
“ஐகோர்ட்டாவது மயிராவது, மண்ணாங்கட்டியாவது“ என கர்வத்துடன் பேசிய எச்.ராஜா என்கிற அராஜகவாதியை தமிழக அரசு இதுவரை ஏன் கைது செய்யவில்லை? சனநாயக ஆற்றல்கள், இயக்கங்கள் எச்.ராஜா மீது புகார் கொடுத்தும் கைதுசெய்ய மறுப்பதேன்? ஏழைகளுக்கு ஒரு நீதி? ஆளும் காவி எஜமானர்களுக்கு ஒரு நீதியா? உரிமை கேட்பவர்களை சமூகவிரோதிகள், தீவிரவாதிகள் என வழக்குபதிவுசெய்து, பொது மக்களை, போராளிகளை கைதுசெய்யும் தமிழக அரசு, காவல்துறை, சமூகத்திற்கும் அனைத்து மக்களுக்கும் ஆபத்தான சக்திகளாக வளர்ந்துவரும் எச்.ராஜா, எஸ்.வி சேகர் போன்றவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யத் தயங்குவதேன்? தமிழக அரசு மதவெறி சக்திகளுக்குத் துணைபோகிறதா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் களத்தில் நின்று, காவி பயங்கரவாதத்தை சனாதன கோட்பாட்டை எதிர்த்து வருபவரும், மற்றும் எச். ராஜாவின் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான அராஜக வன்முறைப் பேச்சைக் கண்டித்துவருபவர் விசிக தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள். சமத்துவத்திற்காகவும் சனநாயகத்திற்காகவும் குரல் கொடுத்துவருபவரை வன்முறையாளனாகவும், ஆபத்தான விரோதி போலவும் சித்தரித்துப் பேசி வரும் எச். ராஜாவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் அரியலூர் நந்தினி முதல் காஷ்மீர் சிறுமி ஆஷிபா ஆகியோர் மீதான பாலியல் கொலைகள் வரை, சென்னை சுவாதி முதல் ஒசூர் நந்தீஸ் – சுவாதி, உடுமலை சங்கர், சிவகங்கை தமிழ்ச்செல்வி, உடுமலை விமலாதேவி ஆகியோரை ஆணவக்கொலை செய்ததுவரை இக்கொலைகளை நிறைவேற்றியவர்கள் சாதிய மதவெறி கும்பல்கள்தான். அண்மைய ஆண்டுகளில் மதுரவாயிலில் நடந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ரகசியக் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் வன்முறையை ஏவிவிடும் முடிவுகளை எச். ராஜா மறுப்பாரா? குஜராத் மதக்கலவரம் முதல் முசாபர் நகர் வன்முறை என ஒவ்வொரு கலவரத்தையும் கட்டவிழ்த்துவிட்டது யார்? இந்துத்துவ மதவெறி சக்திகள்தான் என்பதை மறுப்பாரா? ஆக யார் சமூக விரோதிகள்? யார் பயங்கரவாதிகள்? தொடர்ந்து ரவுடித்தனத்தையும் அராஜக வன்முறை செயலையும் தூண்டி தலைவர்களை அவமதித்துவரும் எச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சனநாயக சக்திகள், சமூக நீதி உணர்வாளர்கள் வலியுறுத்திட குரல் கொடுப்போம்.
வளர்ந்துவரும் இத்தகைய ஆபத்தான பேர்வழிகளை இம்மண்ணில் அனுமதியோம். சமூக நீதிக்கும் அமைதிக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் சாதிவெறி, மதவெறியுடனும் கருத்துக்களைப் பரப்பிவரும் பாஜகவின் தேசிய செயலர் எச்.ராஜாவை உடனடியாக வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். சமூக அமைதியை, மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் இச்சமூக விரோதிகளைத் தடுத்திட உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யவேண்டும் என ஒன்றுபட்டு குரல் எழுப்புவோம். சனநாயக சக்திகள், இயக்கங்கள் மீதான அச்சுறுத்தலை உடைப்போம்.
ரமணி
பொதுச்செயலாளர், சாதி ஒழிப்பு முன்னணி
8508726919, aruvi1967@gmail.com
16.12.2018