சாம்சங் தொழிலாளர் போராட்டம் – தமிழக தொழில் வளர்ச்சிக் கொள்கை மீதான விமர்சனக் குறிப்பு – சிறிராம்

19 Oct 2024

தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கோரி 38 நாட்களாக நடந்த சாம்சங் தொழிலாளர் போராட்டம் தமிழக அரசு தலையிட்டு தற்போது முடித்துவைத்துள்ளது. CITU தலைமையில் தொழிற்சங்கம் அமைத்திட சாம்சங் நிர்வாகம் இறுதிவரை ஒப்புக்கொள்ளாத நிலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகள் குறித்து நிர்வாகம் தொழிலாளர் துறையில் பதில் அளிக்க வேண்டும், தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது என்று ஒப்பந்தம் செய்து போராட்டம் முடிவுக்குவந்துள்ளது.

  1. இதுபோன்ற தொழிலாளர் போராட்டங்கள் தொடரத்தான் போகிறது – 2022 இல் FORD நிறுவனம் ஆலையை மூடியது, அதில் வேலை செய்த 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இழப்பீடு கேட்டு போராடி வெற்றி பெற்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டில் சுங்குவாச்சத்திரத்தில் iPhone தயாரிக்கும் Foxconn தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஆயிரக்கணக்கான இளம் பெண் தொழிலாளர்கள், நிர்வாகம் வழங்கும் மோசமான குடியிருப்பு மற்றும் சுகாதாரமற்ற உணவை கண்டித்து நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டம் நடத்தினர். 2006 ஆம் ஆண்டு மிக ஆரவாரத்தோடு தொடங்கப்பட்ட NOKIA தொழிற்சாலை 8 ஆண்டுகளில் தன் நிறுவனத்தை மூடிவிட்டு 20 ஆயிரத்திற்கு அதிகமான வரிப்பணத்தை அரசுக்கு செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறியது. (MOTOROLA தொழிற்சாலை தொடங்கிய இரு ஆண்டுகளில் மூடப்பட்டது). NOKIA ஆலையில் வேலைசெய்த ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் 2014 இல் போராடி குறைந்த அளவிலான இழப்பீட்டை பெற்றனர். குறிப்பான விசயம் என்னவென்றால் ஸ்ரீபெரும்புதூர் – ஒரகடம் தொழிற்பேட்டை இல் தொடங்கப்பட்ட பெரும்பாலான தொழிற்சாலைகள் அனைத்தும் 20 ஆண்டுகளுக்கும் குறைவான காலம்தான் செயல்படுகிறது. உலக சந்தைக்காக உற்பத்தி செய்யும் இத்தொழிற்சாலைகளின் எதிர்காலம் கேள்விக்குறியானதே. பத்தாண்டுகளுக்கும் மேலாக வேலை செய்துவரும் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு, பணிச் சுமை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் வருங்காலத்தில் வெடித்துக்கொண்டே இருக்கும் நிலை உள்ளது.


2. மோடி அரசின் கார்பரேட்ஆதரவு 4 தொழிலாளர் சட்டங்களைத் திமுக அரசு அமல்படுத்த தொடங்கிவிட்டதா?


கார்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்த அதே காலத்தில் மோடி அரசு அனைத்துத் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி 4 தொகுப்புச் சட்டமாக்கி கரோனா காலத்தின்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. ‘ இனி நிரந்தரப் பணியில் எவரையும் பணிக்கு அமர்த்தவேண்டியது இல்லை. ஒவ்வொரு நிறுவனமும் தொழிலாளியுடன் குறுகிய கால ஒப்பந்த முறையின் அடிப்படையில் பணியில் அமர்த்தலாம் (எப்போது வேண்டுமானாலும் பணியில் இருந்து சட்டப் பூர்வமாகவே நீக்கிவிடலாம்), 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரமாக உயர்த்துவது , இதன் மூலம் ஊதியத்தைக் குறைத்து வழங்குவது ஆகியவை புதிய சட்டத்தின் உள்ளடக்கம் ஆகும். இதற்கான வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை தற்போது ஒவ்வொரு மாநிலமும் திருத்தங்கள் செய்து நடைமுறையாக்க வேண்டும்.
இதன் தொடர்ச்சியாகவே கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக அரசு வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டது. பிறகு எதிர்ப்பின் காரணமாக அதனைத் திரும்பப் பெற்றது. ஆனால், தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள வரைவு விதிகளில் 11 மணி நேரம் என குறிப்பிட்டு புதிய தொழிலாளர் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த முயற்சிக்கிறது. சாம்சங் நிர்வாகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவுடன் செயல்படும் திமுக அரசு இதனை உறுதிப்படுத்துகிறது.

3. தமிழ்நாடு அரசின் தொழில் கொள்கையில் உள்ள சிக்கல்

  • இந்தியாவிலே தொழில்துறை மாநிலமாகவும் 60% நகரமயமான மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. 50 ஆண்டுகளாக விவசாயத்தை புறக்கணித்துத் தொழிற்சாலைகளை ஊக்குவிப்பதே தமிழக வளர்ச்சிக் கொள்கையாக இருந்து வந்துள்ளது.
  • இதன் விளைவாகத் தான் விவசாய நிலங்களை அழித்து தொழில்துறை மற்றும் அதற்குத் தேவையான கட்டுமானத்தைத் தொடங்கும் தமிழக அரசின் பல முயற்சிகளுக்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். உதாரணத்திற்கு பரந்தூர் புதிய விமான நிலையம், திருவண்ணாமலை மேல்மா SIPCOT தொழிற்பேட்டை, சேலம் – சென்னை 8 வழிச் சாலை, தஞ்சை டெல்டா மீத்தேன்* எடுப்பு திட்டம் ஆகியவை.
  • இந்தியாவின் தொழில்துறைக்கு தன் சொந்த தொழில்நுட்ப ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கு மாறாக, பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்து தான் தொழில்நுட்ப ஆற்றலை பெற்றுள்ளது. உதாரணத்திற்கு ஆட்டோமொபைல் துறையை எடுத்துக்கொண்டால், 1980 இல் ஜப்பான் நாட்டை சேர்ந்த SUZUKI நிறுவனத்துடன் TVS நிறுவனம் உடன்படிக்கை, HONDA நிறுவனத்துடன் Hero நிறுவனம் உடன்படிக்கை, KAWASAKI நிறுவனத்துடன் BAJAJ நிறுவனம் உடன்படிக்கை செய்துகொண்டனர். இவை பெரும்பாலும் உள்நாட்டு சந்தைக்குத் தேவையான வாகனங்களையே உற்பத்தி செய்தன. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இவை அனைத்தும் தற்போது தனித் தனியே உற்பத்தி செய்திட தொழில்நுட்ப ஆற்றலைப் பெற்றுள்ளனர். வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நூற்று கணக்கான உள்நாட்டு OEM என அழைக்கப்படும் சிறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் மலர்ந்தன.
  • 90’ களில் கொண்டுவரப்பட்ட தாராளமயக் கொள்கை அமலாக்கத்திற்குப் பிறகு எந்த ஒரு பன்னாட்டு நிறுவனமும் இங்கு தனியாக முதலீடு செய்து உற்பத்தி செய்யலாம். உலகச் சந்தைக்கு சேவை செய்யும் ஏற்றுமதி பொருளாதாரத்தை ஊக்குவிக்க SPECIAL ECONOMIC ZONE (SEZ) சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற திட்டத்தை அமல்படுத்தினர். சொற்ப விலைக்கு நிலம், தடையற்ற இலவச தண்ணீர், மின்சார வரி விலக்கு, 10 ஆண்டுகளுக்கு வருமான வரி விலக்கு மட்டும் அல்லாமல், குறைந்தக் கூலிக்குத் திறனுள்ள மனித ஆற்றல் எனத் தமிழ்நாட்டின் இயற்கை – மனித வளத்தை உலக சந்தையில் விற்கும் முயற்சியைத்தான் கடந்த 30 ஆண்டுகளில் தமிழக அரசின் பொருளாதார வேலைத்திட்டமாக உள்ளது. மனித வளத்தைத் தடையின்றி பயன்படுத்திட / சுரண்டிடவே ஒப்பந்த முறையை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்கின்றன.

4. அந்நிய முதலீடு என்றாலே வளர்ச்சியா ?

சுற்றுச் சூழல் பாதிப்புள்ள உற்பத்தி, குறைந்த விலையில் உற்பத்தி, முதலீட்டையும் லாபத்தையும் எடுத்துக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் தடையின்றி இந்திய/தமிழகத்தை விட்டு வெளியேறும் சுதந்திரம் ஆகியவை தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய – தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான காரணங்கள். கூலிக்கு வேலை கிடைக்குமே தவிர தொழிற்நுட்பம் தமிழக நிறுவனங்களுக்கு கிடைப்பது இல்லை. ஆயிரம் கோடி முதலீடு செய்தாலும் சில நூறு வேலைவாய்ப்புகளே கிடைக்கிறது ஏனெனில் முதலீடு என்பது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நவீன இயந்திரங்கள் மதிப்பையும் உள்ளடக்கியது. சிறு அளவிலான வேலைவாய்ப்பு மற்றும் அந்த ஆலையை சுற்றி நடக்கும் வர்த்தகமும் தான் தமிழ் மக்களுக்கு பயன்படும். பணப் புழக்கத்தை அதிகரிக்கும், ஆனால் உள்நாட்டில் தொழிநுட்பம் உள்ளிட்ட சொத்துக்கள் சேர்க்கப்படாது.

5. நிகழ்காலத்தில் மக்கள் நலன் / தொழிலாளர் நலன் என்பதின் பொருள் என்ன ?

  • “ஊதியம் தான் முதன்மை பிரச்சனை, வேலை இன்மை அல்ல’ என்று தமிழக அரசின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் Jean Drèze கூறுகிறார். விலைவாசி ஏற்றத்தை கணக்கில் கொண்டால் கடந்த பத்து ஆண்டுகளில் கூலி தொழிலாளர்களின் சராசரியான மாதம் வருமானம் 16% குறைந்துள்ளது என International Labour Organisation தெரிவித்துள்ளது. உணவு பொருட்களின் விலை ஏற்றம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் சமூகத்தின் அடித்தட்டு மக்களின் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதாக பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
  • தொழில் துறையில் பெரும்பாலான வேலைகள் ஒப்பந்த முறையிலானவை அதில் புலம்பெயர் தொழிலாளர்களை குறைந்த ஊதியத்திற்கு பணியில் அமர்த்துவதால் தமிழக தொழிலாளர்களின் ஊதியமும் உயர்த்தப்படுவதில்லை. குறைந்தபட்ச கூலி சட்டத்தை தமிழக அரசு நியாயமாக அமல்படுத்துவதும் இல்லை…உதாரணத்திற்கு, இன்றைய தேதியில் ஒரு பட்டதாரிக்கு / உயர் திறன் கொண்ட தொழிலாளிக்கு தமிழக அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் என்பது ரூ. 14,500 மட்டுமே. மத்திய அரசு ரூ. 26,900 நிர்ணயித்துள்ளது .
  • இதனால் தான் பல பொறியியல் மற்றும் பிற பட்டதாரிகள் படிப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமல் Swiggy, Zomato, Ola, Uber போன்ற திறன் குறைவான தற்காலிக தன்மை உடைய வேலைகளை செய்கின்றனர்.
  • தனியார் கல்வி, தனியார் மருத்துவம், தனியார் போக்குவரத்து போன்ற
    அனைத்து அத்தியாவசிய துறைகளை தனியாரிடம் ஒப்படைத்துவிட்ட நிலையில் தொழிலாளர் வாழ் நிலையில் முன்னேற்றம் எப்படி சாத்தியப்படும் ?
    2022ஆம் ஆண்டு கணக்கின் படி இந்திய மக்கள் தொகையில் சமூக அடுக்கில் மேலே உள்ள 10% நபர்கள் நாட்டின் 60% மொத்த ஆண்டு வருமானத்தையும் 80% சொத்தும் சேர்த்துள்ளனர் (1% உள்ளவர்கள் நாட்டின் 23% ஆண்டு வருமானமும் 40% சொத்தும் சேர்த்துள்ளனர்.). ஆக பெரும்பான்மை 90% இந்திய மக்கள் மீதம் உள்ள 40% ஆண்டு வருமானத்தையும் 20% சொத்தையும் மட்டுமே பகிர்ந்துகொள்கின்றனர். இந்தியா போன்ற சாதிய சமூகத்தில் நிலம், மூலதனம் மற்றும் கல்வி பெற்ற உயர் சாதிகளுக்கே இவை அதிகம் பயனடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாறு காணாத அளவிலான ஏற்றத்தாழ்வு கடந்த 30 ஆண்டுகளாக அதிகரித்தாலும் கடந்த 10 ஆண்டு மோடி ஆட்சியில் தீவிரம் பெற்றுள்ளது.

இந்திய அளவிலான இந்த நிலை தமிழகத்தில் வேறாக உள்ளதா? அல்லது உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

இயற்கை வளப் பாதுகாப்பு, சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வு களையப்பட்டு தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரம் உயரும் நோக்கில் தமிழக தொழில் வளர்ச்சிக் கொள்கை அமைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW