ஃபலஸ்தீனின் உறுதி – ரியாஸ்

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் ‘பேரழிவு ஆயுதங்களை அழித்தல்’ என்ற கோஷத்தை அடிப்படையாக வைத்து ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகள் மீது கடுமையாகவும் சிரியா, சூடான், யெமன் போன்ற நாடுகள் மீது அவ்வப்போதும் தாக்குதல் நடத்தி மனித குலத்திற்கு எதிரான மாபெரும் குற்றத்தை அமெரிக்கா நிகழ்த்தியது. தற்போது ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் ‘பிணை கைதிகளை மீட்டல்’ என்ற கோஷத்தை அடிப்படையாக வைத்து ஃபலஸ்தீன், லெபனான் நாடுகள் மீது கடுமையாகவும் சிரியா, யெமன் நாடுகள் மீது அவ்வப்போதும் தாக்குதல் நடத்தி மனித குலத்திற்கு எதிரான குற்றத்தை இஸ்ரேல் நிகழ்த்தி வருகிறது. அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உலக மக்கள் கண்டித்த போதும் ஆட்சியாளர்கள் கள்ள மௌனம் காத்தனர். தற்போதும் அதே நிலை தொடர்கிறது.
ஓராண்டுக்கும் அதிகமாக ஃபலஸ்தீனின் காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்தி வரும் மிருகத்தனமான தாக்குதலில் இதுவரை நாற்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது தவிர ஃபலஸ்தீனின் மற்றொரு பகுதியாகிய மேற்குக் கரையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமான ஃபலஸ்தீன மக்கள் அநியாயமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இத்துடன் இவ்வருடம் செப்டம்பர் மாதம் முதல் லெபனான் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் குழந்தைகள் மற்றும் பெண்களாவர்.
பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள், பல டன் எடை கொண்ட வெடிகுண்டுகள் என அனைத்து விதமான ஆயுதங்களையும் வெறும் 365 சதுர கிலோமீட்டர் கொண்ட பரப்பளவின் மீது ஏவி இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஏற்கெனவே அகதிகளாக்கப்பட்ட மக்களை மீண்டும் மீண்டும் அகதிகளாக்குவது, ஒரு நபர் கூட மிச்சம் இல்லாமல் ஒட்டுமொத்த குடும்பங்களையும் அழிப்பது, மருத்துவமனைகள் மற்றும் கல்வி வளாகங்கள் மீது தொடர் தாக்குதல் நடத்துவது என ஃபலஸ்தீன பூமியில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் அட்டூழியங்கள் தொடர்கின்றன. பசியும் பட்டினியும் ஒருபுறம் வாட்ட மறுபுறம் தொற்று நோய்களால் ஃபலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, தண்ணீர், மின்சாரம், மருந்து, என எதுவும் கிடைக்காத பிரதேசமாக காஸா மாறி உள்ளது.
காஸாவில் 90 சதவீத வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டிலேயே காஸாவை ‘வாழ தகுதியற்ற நகரமாக’ ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அப்படி என்றால் தற்போது அப்பகுதி எவ்வாறு இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
இஸ்ரேலின் தாக்குதல்களில் ஹமாஸ் இயக்க மூத்த தலைவர்கள் ஸலாஹ் அல் அரூரி, இஸ்மாயில் ஹனிய்யா, யஹ்யா சின்வார் உள்ளிட்டோரும் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ், ஃபுஆத் அல் ஷுக்ர் உள்ளிட்ட தலைவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். யஹ்யா சின்வாரை தவிர்த்து ஏனைய படுகொலைகள் ஈரான், லெபனான் ஆகிய வெளிநாடுகளில் நிகழ்த்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் செயல்கள் சர்வதேச சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் என அனைத்திற்கும் எதிராக இருந்த போதும் உலக நாடுகளால் எதுவும் செய்யாமல் மௌனம் காக்கின்றன.
முடக்கப்படும் போராட்டங்கள்
இஸ்ரேலில் அக்கிரமங்கள் மற்றும் அடக்குமுறைகளை கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் தங்களின் கண்டனங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனங்களை முற்றிலுமாக இல்லாமல் ஆக்கும் வேலைகளை அரசாங்கங்கள் செய்து வருகின்றன. ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டால் கூட வழக்கு பதிவு செய்யும் நடைமுறை நமது நாட்டில் உள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான கண்டனங்களை ‘செமிட்டிக் எதிர்ப்பு’ கண்டனங்களாக அடையாளப்படுத்தி அவற்றை தடை செய்யும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஃபலஸ்தீனுக்கு எதிரான நிகழ்ச்சிகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றன.
இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து அமெரிக்க பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற போராட்டங்கள் உலகின் கவனத்தை ஈர்த்தன. ஆனால் தற்போது அப்போராட்டங்களை ஒடுக்கும் வகையில் பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆரம்ப நாட்களில் ஆதரவளித்த பல்வேறு பல்கலைக்கழக நிர்வாகங்கள் தற்போது எதிர்நிலையை எடுக்கத் தொடங்கியுள்ளன. ஃபலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடத்தியதற்காக கடந்த ஆறு மாதங்களில் மட்டும் மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இனப்படுகொலையை நிறுத்த வேண்டும், ஃபலஸ்தீன ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே மாணவர்களின் முக்கியமான கோரிக்கை. இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களுடன் செய்துள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் இஸ்ரேலிய நிறுவனங்களில் முதலீடுகள் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கூட முன்வராத பல்கலைக்கழக நிர்வாகங்கள், காவல்துறையை ஏவி அவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றன. மாணவர்கள் சிலர் கல்வி வளாகங்களில் இருந்து இடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
கல்லூரி பேராசிரியர்களும் இந்த அடக்கு முறைகளில் இருந்து தப்பவில்லை. ஃபலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டிற்காக பென்சிலின்வேனியா நகரில் அமைந்துள்ள முஹ்லன்பெர்க் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை மௌரா ஃபின்கெல்ன்ஸ்டைன் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஃபலஸ்தீன ஆதரவிற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட முதல் முழு நேர பேராசிரியர் இவர் என்பதை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய அடக்குமுறைகள் காரணமாக அரபு மற்றும் முஸ்லிம் மாணவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவிப்பதற்கும் தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்துவதற்கும் தயங்குகின்றனர். கல்வி வளாகங்கள் மூலம் கொடுக்கப்படும் நெருக்கடிகள் தங்களின் கல்வி உரிமையை பறித்து விடுமோ என்ற அச்சமும் அவர்களிடம் மேலோங்கி உள்ளது. தங்களின் குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டு தங்களின் நிலம் அபகரிக்கப்படுவதை கண்டித்து தார்மீக ரீதியான கண்டனத்தை பதிவு செய்வதற்கு கூட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்யும் கொடையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நெருக்கடிகள் மற்றும் மிரட்டல்கள் காரணமாகவே பல்கலைக்கழக நிர்வாகங்கள் இத்தகைய நிலைப்பாட்டை எடுக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. அதிகார மையங்களில் உள்ளவர்களும் பணம் படைத்தவர்களும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே உள்ளனர். இது அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை என்பதையும் நாம் அறிந்தே உள்ளோம்.
இஸ்ரேலின் ‘சாதனை’யும் அடுத்த திட்டமும்
‘ஹமாஸ் இயக்கத்தை அழிக்க வேண்டும்’, ‘பிணைக் கைதிகளை மீட்க வேண்டும்’ என்ற கோஷத்துடன் ஃபலஸ்தீன் மீது தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல். ‘காஸாவை தரைமட்டமாக்கி விடுவோம்’ என்று அப்போது கொக்கரித்தார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு. ஆனால் தாக்குதல் தொடங்கி ஓராண்டு முடிந்துள்ள நிலையில் ஹமாஸ் இயக்க தலைவர்கள் சிலரை கொலை செய்வதில் வெற்றி அடைந்திருந்தாலும் அந்த இயக்கத்தை இஸ்ரேலால் அழிக்க இயலவில்லை.
'காஸாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்களை நிறுத்துவோம்'
என்று கூறி கடந்த 15 ஆண்டுகளில் நான்கு முறை ஃபலஸ்தீன் மீது இஸ்ரேல் பெரும் தாக்குதல்களை நடத்தியது. கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கியது, பொதுமக்களையும் சில தலைவர்களையும் கொலை செய்தது என்பதை கடந்து இஸ்ரேலால் அப்போதும் எதையும் சாதிக்க முடியவில்லை. இப்போதும் சாதிக்க முடியவில்லை.
‘ஹமாஸ் ஒரு சித்தாந்தம். அதனை அழிக்க முடியாது’ என்று இஸ்ரேலின் முன்னாள் மற்றும் இந்நாள் இராணுவ தளபதிகள் கூறியுள்ள போதும் நேதன்யாகு உள்ளிட்ட தலைவர்களின் போர்வெறியை தணிப்பதற்காகவே ஃபலஸ்தீன மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்படுகின்றனர்.
தாக்குதலின் ஆரம்ப நாட்களில் வடக்கு காஸாவை தங்களின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்தது. ஆனால் தற்போது போராட்ட இயக்கங்களின் தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் எதிர்கொண்டு வருகிறது. வடக்கு காஸாவை ஏனைய பகுதிகளில் இருந்து பிரிப்பதன் மூலம் மக்கள் மீது பட்டினியை திணித்து, தாக்குதல்களை நடத்துவதன் மூலம் அப்பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்று செப்டம்பர் மாதம் முன்னாள் இராணுவ ஜெனரல் ஜியோரா ஐலெண்ட் ஒரு திட்டத்தை முன் வைத்தார்.
“ஹமாஸ் இயக்க தலைவர் சின்வாருக்கு நிலமும் கண்ணியமும்தான் முக்கியம். இதனை செய்வதன் மூலம் நீங்கள் இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம்” என்று அவர் கூறினார். ‘ஜெனரலின் திட்டம்’ என்று அறியப்படும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக நேதன்யாகு கூறினார். தற்போது வடக்கு காஸாவில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவர்கள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளதை காட்டுகிறது. படுகொலை மற்றும் கட்டாய இடப் பெயர்வுகள் மூலம் வடக்கு காஸாவை இஸ்ரேல் அழித்து வருவதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
காஸாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை ஆக்கிரமிப்பதன் மூலம் காஸா நகரத்திற்குள் அதன் எல்லையை சுருக்கி தனது ஆக்கிரமிப்பு திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இஸ்ரேல் முயற்சி செய்கிறது. நிலையான எல்லைக்கோடு இல்லாத இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை உலக நாடுகள் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றன.
உலக நாடுகளின் ஆதரவும் மௌனமும்
அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் இனப்படுகொலை மற்றும் தாக்குதல்களை ஒரு நாள் கூட இஸ்ரேலால் நடத்த முடியாது என்பது உலகறிந்த உண்மை. இஸ்ரேலை பாதுகாப்பதற்காக ஒவ்வொரு மாதமும் பல மில்லியன் டாலர்களை அமெரிக்க அரசாங்கம் செலவு செய்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவும், ஏனைய நாடுகளின் மௌனமும் இஸ்ரேலுக்கு தைரியத்தை கொடுத்துள்ளன. அதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸை தங்களுடைய நாட்டிற்கு வரக்கூடாது என்றும் வெளிப்படையாகவே மிரட்டல் விடுக்கிறார்கள். லெபனானில் ஐநா பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.
லெபனானில் பாதுகாப்பு பணியில் இந்திய வீரர்கள் உள்ள போதும், இஸ்ரேல் தாக்குதல் நடத்திய இடத்தில் இந்திய வீரர்கள் இல்லை என்று சமாதானம் பேசும் இந்திய அரசாங்கம் இஸ்ரேலை கண்டிக்கவில்லை.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அமைதியை நிலை நாட்டுவதற்காக அமெரிக்க உள்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இதுவரை 11 முறை வருகை புரிந்துள்ளார். ஆனால் எந்த பயணமும் உபயோகமான முடிவை எட்டவில்லை.
யஹ்யா சின்வார் உள்ளிட்ட ஹமாஸ் இயக்க தலைவர்கள் கண்காணிப்பதற்கும் அவர்கள் குறித்த தகவல்களை திரட்டுவதற்கும் அமெரிக்காவின் சிறப்பு படைகள் மற்றும் உளவு பிரிவினர் இஸ்ரேல் படையினருடன் இணைந்து செயல்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பெருமையுடன் கூறுகிறார். ஃபலஸ்தீன மக்களை கொலை செய்வதற்கு ஆயுதங்களையும் ஆதரவையும் வழங்கிக் கொண்டே இவர்களால் எவ்வாறு சமாதானத்தை ஏற்படுத்த முடியும்?
விரல் விட்டு எண்ணக்கூடிய சில நாடுகள் மட்டுமே இஸ்ரேலை எதிர்த்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறியதற்காக சர்வதேச நீதிமன்றத்தில் டிசம்பர் மாதம் இஸ்ரேலுக்கு எதிராக வழக்கு தொடுத்தது தென் ஆப்பிரிக்கா. நிகாரகுவா, பெல்ஜியம், கொலம்பியா, துருக்கி, லிபியா, எகிப்து, மாலத்தீவு, மெக்ஸிக்கோ, அயர்லாந்து, சிலி, ஃபலஸ்தீன், மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் தென்னாப்பிரிக்காவுடன் இணைந்துள்ளன. சில நாடுகள் இஸ்ரேலுடன் தூதராக உறவுகளை துண்டிப்புள்ளன.
பெரும்பான்மை உலக நாடுகளின் கள்ள மௌனமும் நயவஞ்சகத்தனமும் தொடரும் வரை இஸ்ரேல் போன்ற நாடுகளின் அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். சின்வார் படுகொலையை வரவேற்கும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் ஃபலஸ்தீன மக்கள் இப்போது மண்டியிட்டு விட மாட்டார்களா என்ற நப்பாசையை வெளிப்படுத்துகின்றனர். ‘(சின்வாரை கொலை செய்ததன் மூலம்) கணக்கை தீர்த்து விட்டாலும் எங்களின் காரியம் முடியவில்லை’ என்ற நேதன்யாகுவின் கூற்று இனப்படுகொலை நிறுத்தும் எண்ணம் அவருக்கு எப்போதும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகள் முடிவுக்கு வர வேண்டும், சுதந்திர ஃபலஸ்தீனம் உருவாக வேண்டும் என்ற தங்களின் லட்சியத்தை இனப்படுகொலைகளால் நிறுத்த இயலாது என்பதே ஃபலஸ்தீன மக்கள் உலக சமூகத்திற்கு வழங்கும் செய்தியாக இருக்கிறது.
ஃபலஸ்தீனின் வரலாறு, கலாச்சாரம், மற்றும் நினைவுகளுடன் பின்னிப்பிணைந்துள்ள தங்களின் நிலப்பரப்பை விட்டுச் செல்வதற்கு அம்மக்கள் தயாராக இல்லை. ‘இஸ்ரேலின் தாக்குதல் முடிந்த பிறகு உங்களின் நிலங்களுக்கு திரும்பலாம்’ என்று 1948இல் உலக நாடுகள் கூறியதை நம்பி ஏமாந்தது போல் இப்போது ஏமாறுவதற்கு அவர்கள் தயார் இல்லை. இப்போராட்டம் தங்களின் இருப்பிற்கான போராட்டம் அல்ல மாறாக தங்களின் அடையாளத்திற்கான போராட்டம் என்பதை உணர்ந்ததால்தான் எத்தனை அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டாலும் உறுதியுடன் தங்களின் வாழ்க்கையை அவர்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
நீதிக்கும் அநீதிக்கும் இடையே நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் நாம் எந்த பக்கம் நிற்கிறோம் என்பதை சர்வதேச சமூகம் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.