ஆயிரம்விளக்கு தொகுதியில் பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு !

06 Apr 2021

கடந்த சனவரி 20 அன்று சுமார் 70 அமைப்புகள் ஒன்றுகூடி “தமிழக மக்கள் விரோத பாசிச பாசகவை வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்” என்ற முழக்கத்தை அறிவித்தன. இதன்மீது ஏற்பட்ட விவாதத்திற்குப் பின் ஒருங்கிணைந்த அமைப்புகள் “மக்கள் இயக்கங்கள்” என்ற பெயருடன் முன்னகர்ந்தன. அடுத்தடுத்த மண்டலக் கூட்டங்கள் நடக்கத் தொடங்கியிருந்த நேரத்தில், பிப்ரவரி 7 ஆம் தேதி இதை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் உள்ளிட்ட தோழர்கள் ஓராண்டுக்கு முன்பு போடப்பட்ட பொய் வழக்கு ஒன்றில் ஊபா UAPA பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டனர். ஆயினும் இந்த கூட்டுசெயல்பாடு முடங்கிவிடவில்லை. சேலம், ஈரோடு, தஞ்சை, மதுரை, கோவை என கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடந்தன. பாசிச பாசக எதிர்ப்புப் பரப்புரையை தேர்தல் களத்தில் மேற்கொள்வதற்கு ஒரு செயலுத்தியாக மக்கள் இயக்கங்கள் சார்பாக பாசக போட்டியிடும் தொகுதியில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

ஒருகட்டத்தில் பாசக 20 தொகுதிகளில் போட்டியிடுவது  உறுதியானது. வேட்பு மனுத் தாக்கலுக்கு வெறும் ஒரு வாரம் மட்டுமே கால அவகாசம் இருந்தது.  பாசக போட்டியிடும் 20 தொகுதிகளில் முக்கிய வேட்பாளர்கள், பாசிச கொள்கை கொண்டவர்கள் போட்டியிடுவனவற்றில் மக்கள் இயக்கங்கள் வேட்பாளர்களை நிறுத்த முயன்றது.  

மார்ச் 17 அன்று சென்னையில் தியாகராய நகரில் மக்கள் இயக்கங்கள் சார்பாக நடத்தப்பட்ட எழுச்சிமிகு பொதுக்கூட்டத்தில் பாசிச பாசகவைத் தமிழக மக்கள் இத்தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டது.

சென்னை மண்டலத்தில் ஆயிரம்விளக்கு தொகுதியில் பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக பரப்புரை செய்வதற்காக மக்கள் இயக்கங்கள் சார்பாக தமிழ்த்தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் பரிமளா வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.

மார்ச் 20 ஆம் தேதி  அன்று நேர்க்காணல் முடிந்தது. 23 ஆம் தேதி முதல் ஆயிரம் விளக்கு தொகுதியில் ”பாசகவை ஏன் தோற்கடித்தாக வேண்டும்?” என்ற பரப்புரை தொடங்கப்பட்டது. மார்ச் 23 முதல் ஏப்ரல் 4 வரை பரப்புரை செய்யப்பட்டது. தாமஸ்  சாலை, டாக்டர் கிரியப்பா சாலை, நமச்சிவாயபுரம், புஷ்பா நகர், கிரீம்ஸ் சாலை, கோபாலபுரம், டிரஸ்ட் புறம், சூளைமேடு,  செளராஷ்டிரா நகர், ஹபிபுல்லா சாலை, ஆர்.கே. புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரப்புரை செய்யப்பட்டது. இவை பெரும்பாலும் அடித்தட்டு மக்கள் வாழக் கூடிய பகுதிகளாகும். அன்றாடம் பெண் தோழர்களின் பங்கேற்பு கணிசமாக இருந்தது. பரப்புரை தொடங்கிய உடனேயே “அரண் செய்” யூடியூப் சேனல் இந்த செய்தியை வெளியுலகம் அறியத் செய்தது.

31-3-2021 அன்று டாக்டர் கிரியப்பா நகர் பகுதியில் நடந்த பரப்புரையில் சைவ, கிறித்தவ, இஸ்லாமிய சமயப் பெரியவர்கள் கலந்துகொண்டு பாசகவை ஏன் தோற்கடிக்க வேண்டும் ? என்று விளக்கினர். தமிழ் சைவப் பேரவையின் தலைவர் திருமதி கலையரசி நடராஜன், அருட்தந்தை குழந்தைசாமி, இமாம் உலமாக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் கமாலுதீன் மன்பஈ மற்றும் இமாம் முகம்மது யாகூப் பைஜி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அன்றைய பரப்புரை நிகழ்வை ‘ரெட் பிக்ஸ்” யூடியூப் சேனலில் வெளிவந்து பரவலான மக்களைச் சென்றடைந்தது.

பரப்புரையின் போது மக்களிடம் 20,000 துண்டறிக்கையைக் விநியோகித்து ”பாசகவுக்கு வாக்களிக்காதீர்கள், குஷ்பூக்கு ஓட்டுப் போடாதீர்கள்” என்று சொன்ன போது, மக்கள் சொன்னவற்றில் சில.

“இலட்ச ரூபாய் கொடுத்தாக்கூட அவுங்களுக்குப் போடமாட்டோம்”

“அவுங்க வந்தா முழுக்க இந்திக்காரங்க வந்துருவாங்க”

“நாங்க போடவே மாட்டோம்”

“குஷ்பூவெல்லாம் வராதுப்பா..”

பாசக மீதான கோபத்தை மக்கள் இப்படி பலவிதமாக வெளிப்படுத்தினர். விலைவாசி உயர்வு, 500 ரூ, 1000 ரூ செல்லாக் காசு அறிவிப்பு, ஜி.எஸ்.டி., தமிழர் வேலைவாய்ப்பு பறிப்பு, கொரோனா கால இரக்கமற்ற ஊரடங்கு முதலானவற்றின் காரணமாக மக்களிடம் பாசக மீது கடும் கோபம் இருப்பதைக் காண முடிந்தது. மேலும் நடுவண் பாசக அரசு அதிமுக தலைமையிலான தமிழக அரசை அடிமைப் போல் நடத்துகிறது,  அதிமுகவை தன் விருப்பம் போல் வளைக்க முயல்கிறது பாசக போன்ற முன்வைப்புகள் அதிமுக ஆதரவாளர்களையும்கூட செவிமடுக்க வைத்தது.

ஹபிபுல்லா சாலையில் உள்ள ஆர்.கே.புரம் என்ற ஒரே ஒரு பகுதியில் மட்டும் பாசக மற்றும் அதிமுகவினரால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

சூளைமேடு F5 காவல் நிலைய அதிகாரிகள் மட்டும் ‘பிஜேபியை விமர்சிக்க கூடாது’ என்று நமக்குப் பாடம் எடுத்தனர். நம் பரப்புரைக்கு இயன்றவரை இடையூறு செய்தனர். ‘பாசிச பாஜக’ என்ற சொல்லை பதாகையிலிருந்து நீக்குமாறு அழுத்தம் கொடுத்து, அனுமதி ரத்து செய்யப்படும் என்று அச்சுறுத்தினர். அப்பகுதியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாசகவினருக்கு  அஞ்சி நடந்தனர்.

மொத்தத்தில், பாசக வேட்பாளர் குஷ்பூ வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்பில்லை என்பதே கள நிலவரம். பாசகவை தேர்தலில் தோற்கடிப்பதில் இந்த 12 நாள் பரப்புரை ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஒருபுறம்.

பாசிஸ்டுகள் அச்சத்தை விதைப்பதன் மூலம் மக்களை வாய்மூடச் செய்யலாம் என்று நம்புகிறார்கள். பாசிச பாசகவுக்கு எதிராக ஆயிரம்விளக்கு தொகுதிக்கு உட்பட்ட தெருக்களில் முகமறியாத இளைஞர் கூட்டம் “பாசகவை தோற்கடிப்போம், அம்பானிக்கு நாட்டை விற்கும் மோடி கட்சியை தோற்கடிப்போம், தமிழர்களுக்கு எதிரான பாசகவை தோற்கடிப்போம்” என்று முழங்குவது பாசிச பாசகவால் மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சத்தைப் போக்க துணை செய்திருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான நீண்டகால யுத்தத்தில் 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் என்பது முக்கியமான திருப்புமுனையாகும். இதில் எதிரி தோற்கடிக்கப்பட்டால் அது நீண்டகால யுத்தத்திற்கான நடைமுறை உத்தி ரீதியான வெற்றியாக அமையும்.

இந்த 12 நாள் பரப்புரை பாசிச எதிர்ப்புப் போராட்டத்தின் அடுத்தடுத்த களங்களைச் சந்தித்து முன்னேறிச் செல்வதற்கான ஊக்கத்தையும் பயிற்சியையும் பரஸ்பர நம்பிக்கையையும் செறிவானப் படிப்பினையையும் களத்தில் பணியாற்றிய மக்கள் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மக்கள் விரோத பாசிச பாசக எதிர்ப்பு இயக்கத்திற்கான ஒருங்கிணைவை அடுத்தடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு இந்த தேர்தல் கால கூட்டுச்செயல்பாடு உரமிடுவதாக அமையும். முன்னேறிச் செல்வோம்! பாசிசத்தை வீழ்த்துவோம்!

பரப்புரையில் பங்கேற்ற அமைப்புகள்:

தமிழ்த்தேச மக்கள் முன்னணி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், சிபிஐ(எம்-எல்) செந்தாரகை (ரெட் ஸ்டார்), திராவிடர் ஒன்றிய சமத்துவக் கழகம், மக்கள் குடியரசு இயக்கம், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம், வெல்பெர் பார்டி ஆப் இந்தியா

மக்கள் இயக்கங்கள், சென்னை மண்டலம்

9941931499 / 9080996628 / 9025870613 / 9840327140 / 9842787845 / 8610035060 / 9444078265

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW