நாடார் வரலாறு : கறுப்பா …? காவியா …? – இந்து சத்ரிய, சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்க்குரல்

28 Nov 2019

-நூல் விமர்சனம்-

தி.லஜபதிராயின் இந்நூலானது ஒரு தடைக்குப் பின்னால் வெளிவந்திருக்கிறது. தடையே இந்நூல் உடனுக்குடன் (மார்ச் 07, 2019, மார்ச் 09, 2019) இரண்டு பதிப்புகளைக் காணவைத்துவிட்டது. நூல்களைத் தடைசெய்வது, நூல் ஆசிரியர்களை மிரட்டுவது, தாக்குவது இந்து சமூகத்திற்குப் புதிதல்ல. 06.03.2019-ஆம் நாள் மதுரை உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் இந்நூலை வெளியிட உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் மறுத்துவிட்டார். இந்நூல் வெளியீட்டு விழாவை அரசுக்கு எதிரான ஒரு விழாவாகவும், அவ்விழாவில் கலந்துகொண்டு பேசுவோர் அரசு எதிர்ப்பாளா்கள் என்றும், இதனை சாதி, மதப் பிரச்சனையை ஏற்படுத்துகிற விழாவாகவும் கருதி உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் மறுத்தது என்பது தனிப்பட்ட இயக்குநரின் முடிவல்ல. அ.தி.மு.க என்கிற அறிவிக்கப்படாத (அனைவராலும் நன்கு உணரப்பட்ட) பாரதிய சனாதாவின் முடிவு. உலகத் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட தமிழ் வளர்ச்சித்துறையே இந்துமத வளர்ச்சித் துறையாக உருமாறி உள்ளது. செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனப் பொறுப்புகளில் நாகசாமி போன்ற பார்ப்பனர்கள் (வலதுசாரி தமிழியல் அறிஞா்கள்) நியமனம் செய்யப்படுகின்றனர்.

உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ்வளர்ச்சித் துறையின்கீழ் இயங்குகிறது. இத்துறையின் தமிழ் வளாச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சா் மாஃபா. (பிரெஞ்சில் மக்கள்திறம்) பாண்டியராஜன். இவர் அதிமுக உறுப்பினா் என்றாலும் சிந்தனையில் ஆர்.எஸ்.எஸ் காரா். உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறப்போகிற நாடார் வரலாறு நூல் இவரின் பார்வைக்கு போனதால் இந்நூலுக்கானத் தடை முடுக்கிவிடப்பட்டிருக்கும். இன்றைய உலகத் தமிழ்ச்சங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் வளர்ச்சித்துறை போன்றவகளின் இயக்குநர்கள் இந்துமத உணா்வும் சாதியப் பற்றும் ஒருங்கே உடையவர்கள். ஜெயலலிதா இறந்த முப்பதாம்நாள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநர் விசயராகவன் “யாகம்” வளர்த்தார். பழ.நெடுமாறன், தமிழிசை உட்பட பலரும் அந்நிகழ்வில் பங்கெடுத்தனர்.

அண்மை நாட்களில் பல நிகழ்வுகள் இந்திய தமிழகச் சூழலில் நடைபெற்றுவருகின்றன. இது மத்திய பாஜக ஆட்சியின் தோன்றாத்துறையோடு அதிமுக அடிமை அரசின் முன்னெடுப்பாகத் தமிழகத்தில் நடந்துவருகிறது. திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற இருந்த ‘தமிழ் இலக்கியத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்’ என்னும் கருத்தரங்கை நிறுத்தினா. இந்துமதவெறியாகள், தமிழ் இலக்கியத்தில் பல வகை இலக்கியங்கள் இருந்த போதிலும்  ஒரு குறிப்பிட்ட காப்பியமான கம்பராமாயணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் வாழ்வியல் தத்துவங்களை எல்லாம் தவறான வரலாறாக இக்கருத்தரங்கு சித்திக்கிறது, இலக்கியத்தில் எழுத்துப் பயங்கரவாதத்தைக் கல்லூரிநிர்வாகம் செய்கிறது. இது மதமோதலை ஏற்படுத்தும் என இந்துமக்கள் கட்சி ரவிக்குமார் கண்டனம் செய்யவும் எச்.ராஜா டுவிட்டரிலும் பதிவு செய்தனர். இப்பதிவைக்காட்டித் தமிழ்வளர்ச்சிப் பண்பாட்டு அமைச்சரான மாஃபா. பாண்டியராஜனும் கண்டித்தார்; கருத்தரங்கம் தடைசெய்யப்பட்டது. இதைப்போல் சென்னை லயோலா கல்லூரியில் நடத்தப்பட்ட ஓவியக் கண்காட்சி, இந்துத்துவ அமைப்புகளால் கடும் எதிர்ப்புக்குள்ளாயிற்று. தபோல்கா், பன்சாரே, கல்புர்கி போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் மூடத்தனத்திற்கு எதிராகப் போராடிவந்ததற்காகவும் இதழியலாளர் கவுரிலங்கேஷ் இந்துத்துவத்திற்கு எதிராகத் தீவிரமாக அறிவுத்துறையில் செயல்பட்டதற்காவும் படுகொலை செய்யப்பட்டது நாடறிந்ததே.

இந்து – கவுண்டர் சாதிய வெறியர்களால் தாக்கப்பட்ட படைப்பாளிகளான பெருமாள் முருகன், புலியூர் முருகேசன், இந்து அடிப்படைவாதிகளின் கொலைப்பட்டியலில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துரை. ரவிக்குமார் எனத் தமிழகமும் இந்துத்துவத்தின் கொலைவெறி அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிவருகிறது. பகுத்தறிவு பகலவன் சுயமரியாதைப் போராளி தந்தை பெரியாரின் சிலைகள் உடைக்கப்படுகின்றன; இழிவு செய்யப்படுகின்றன. இணைநோ்வாக தமிழ்த் தேசியத்தை முன்வைக்கும் பெ.மணியரசன், சீமானின் பெரியாரிய எதிர்ப்பையும் தமிழகம் கண்டுவருகிறது.

நாடார் வரலாறு: கறுப்பா…? காவியா… ? (மார்ச் 09, 2019, இரண்டாம் பதிப்பு) இந்த வரலாற்றுச் சூழலில் உருவான சிறப்பான நூலாகும். நூலின் ஆசிரியர் வழக்கறிஞா் என்பதால் நல்ல தர்க்க முறையிலான உரையாடல் இந்நூலில் அமைந்துள்ளது. 140- பக்கங்களைக் கொண்டு 16- வகையாகத் தலைப்பைப் பிரித்து இந்நூலை அமைத்துள்ளார் ஆசிரியர். 7 -பின்னிணைப்புகளைத் தந்து நூலுக்கு வலிமைச் சோ்த்துள்ளார் நூலாசிரியா் அவர்கள்.

இந்நூலின் நோக்கம் வரலாற்றை மீள்பதிவு செய்வது மட்டுமே, மாறாக குலத்தாழ்ச்சி உயா்ச்சி சொல்வதன்று நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்லாமிய – கிறிஸ்தவ சமூகத்தினருடன், பட்டியல் இன விளிம்புநிலை மக்களுடன் நிற்க வேண்டிய நாடார்களின் எண்ணவோட்டத்தில், இந்து வலதுசாரிச்சிந்தனை மிகுதியாக இருப்பதை சமீப காலமாக முகநூலிலும் பிற சமூக ஊடகங்களிலும் காணமுடிகிறது. இந்நிலையில் கடந்த 200 – ஆண்டுகால வரலாற்றை திரும்பி பார்ப்பது மிகவும் அவசியமாகிறது. (ப.8)

என்று நூலைத் தொடங்குகிறார். நாடார் சமூகம் இந்துமதத்தால் பல இன்னல்களைத் தாண்டி வளர்ந்த சமூகமாக உள்ளபோதிலும் அது தனது கடந்தகால வரலாற்றை மறைக்கிறது. சாதியமயமாகி வருகிறது என்கிற ஆதங்கத்தில் இப்படி எழுதத் தொடங்குகிறார். நூலின் தொடக்கத்திலேயே நாடார் சமூகத்தில் பிறந்து வணிகத்தில் அரசப் பதவிகளில், எழுத்துத் துறையில் உயா்ந்து புகழடைந்தவர்களின் புகைப்படங்களையே வெளிப்படையாக வெளியிட்டு இவ்வுயா்வுக்கும் புகழுக்கும் யார் காரணம் என்பதாகப் பதிவுசெய்கிறார். ஒரு சமூகம் தான் கடந்த வந்த பாதையை மறுக்க இயலாது என்பதை நினைவூட்டுகிறார் லஜபதி.

ஆவணங்களில், ஆராய்ச்சி நூல்களில் நாடார்கள்:

1909 – ஆம் ஆண்டு வெளியான எட்கா் தர்ஸ்டன் மற்றும் கே. ரங்காச்சாரிஎழுதிய தென்னிந்திய குலங்களும் குடிகளும், திருவிதாங்கூரில் கிறிஸ்துவம் எனும் ஜி.டி. மெக்கன்ஸியின் (G.T. Mackenzie) குறிப்புகள், பிஷப் கால்டுவெல்லின் “திருநெல்வேலி சாணார்கள்”, 1871 – ஆம் ஆண்டு, தர்மபூமி என்னும் நூலை எழுதிய சாமுவெல்மட்டீரின் மேற்கோள்கள், ஜெ.சார்கின் பதிவுகள் என நாடார்கள் பற்றிய ஆய்வுகள் வழி நாடார் இனமக்களை அடையாளப்படுத்த முயல்கிறார் நூலாசிரியா்.

எட்கா் தர்ஸ்டன் பதிவுகளில் நாடார் என்ற சாதிக் குறிப்புகள் இல்லை. 1899-ஆம் ஆண்டு நிகழ்ந்த நெல்லை கலகங்கள் மூலம் அறியப்பட்ட மாபெரும் கள் இறக்கும் சாதியாக சாணான் என்ற பெயரே சுட்டப்பட்டுள்ளது.

19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி, திருவிதாங்கூர் அரசாட்சி, கிறிஸ்தவத்திற்கு மாறிய நாடார் பெண்கள் மேலாடை அணிந்தது. அதனால் மூண்ட கலவரம். 1859-இல் Charles travelyan என்ற பெயருடைய மெட்ராஸ் கவர்னர், நாடார் (ம) தீண்டத்தகாத பெண்கள் மேலாடை அணிய உத்தரவு இட்டது.

1874-ஆம் ஆண்டு நாடார்களின் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவு தோல்வி, நாடார்கள் தங்களை சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வாரிசாகவும் சத்ரிய குலத்தவர்களாகவும் அறிவித்துக் கொள்ளுதல், சொத்து ஆவணங்களில் கூட சத்ரியா் எனப்பதிவு செய்தல். கல்விக்கூடங்களை ‘சத்ரியா் பாடசாலை’ எனக் குறிப்பிடுதல், பார்ப்பன புரோகிதர்களை நியமித்துக்கொள்ளுதல், தங்களுக்குள் ‘ கோத்திரம்’ இருப்பதாகச் சொல்லுதல் என்பதாக நாடார்கள் தங்களது சொந்த சாதியை மேனிலையாக்கப் (Sanskritization) படுத்திக்கொண்டனர்.

சாணார்கள் கிறித்துவ மதமாற்றத்தைச் சந்தித்தது பார்ப்பனிய; வெள்ளாள ஒடுக்குமுறையால் தான், வசதி படைத்த சாணார் சிலா் பார்ப்பனிய பண்பாட்டுக் கூறுகளோடு செயல்பட்டனர். இதை ராபர்ட் கால்டுவெல் கணித்திருந்தார். ஆனால் நாடார் சாணார், கிராமணி பெயரீடுகளுக்கான காரணங்கள் உறுதிப்படுத்த முடியவில்லை. இப்படியாகப் பல குறிப்புகளை லஜபதி முன்வைத்துப் பேசுகிறார். நாடார் பற்றிய ஆய்வுகளைப் பயன்படுத்தினாலும் அக்குறிப்புகளிலிருந்து நாடார், சாணார், கிராமணி என்கிற சொல்லுக்கான வரையறை சரியாக உருவாகவில்லை என்றே ஆசிரியர் கூறுகிறார். தொகுத்துரைப்பதெனில், நாடார், சாணார் சமூகம் பல படித்தரமான அடையாளங்களைக் கொண்டுள்ளது என்பதே எனது பார்வை.

கமுதி கோயில் வழக்கின் தீர்ப்பும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்குச் செல்லுதலும்:

ஆங்கிலேய ஆட்சி அதிகாரத்திற்குட்பட்ட ஜமீன் காலத்திலேயே (1855 நவம்பர்) நாடார்கள் இராமநாதபுரம், கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வழிபாட்டு உரிமை வேண்டி கோயிலின் பரம்பரை அறங்காவலரான பாஸ்கர சேதுபதியிடம் முறையிட்டும் அவர் அதை நிராகரித்தார். 1897, மே மாதம் 14 ஆம் தேதி கமுதி கோயிலுக்குள் நாடார்கள் நுழைந்தனர். சேதுபதி கோயில் தீட்டுப்பட்டுவிட்டது என்று பார்ப்பன புரோகிதர்களை வைத்து மகாசம்ப்ரோசனம் சடங்கு செய்ய ரூ. 2500 கேட்டு வழக்குத் தொடா்ந்தார்கள். 20.7.1899இல் மதுரை கிழக்கு சார்பு நீதிமன்றம் நாடார்கள் கோயிலுக்குள் நுழைய தடைவிதித்தும் கோயிலைத் தூய்மைப்படுத்த 500ம் எனவும் தீர்ப்பு வழங்கியது.

அதே சமயம் இரு தரப்பினரும் ஒத்திசைவுடன் முடிவுஎடுத்து நாடார்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க ரூ.3000 பெற்றுக்கொண்டு அனுமதியளிக்க, பாஸ்கரசேதுபதி முன்பணமாக ரூ.5000 வாங்கிக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தஞ்சை பொறையாரைச் சார்ந்த செல்வந்தர் இரத்தினசாமி நாடார் இதில் முன்முயற்சி எடுத்தார். ஆனால் மேல்முறையீட்டில் சட்ட ஒழுங்கு சிக்கல் வரும் என எண்ணிய மதுரை மாவட்ட ஆட்சியா் சேதுபதிக்கு அறிவுறுத்த அவர் ஒப்பந்தத்தை ரத்து செய்தார். கமுதி ஆலயத்தின் எந்தப் பகுதியிலும் நாடார்கள் நுழைய முடியவில்லை. இது போலவே திருச்சுழி கோயில் நுழைவுச் சிக்கலும் (11.8.1890) அமைந்தது. நாடார்களின் கோயில் நுழைவைத் தடுத்து வந்த பாஸ்கர சேதுபதி அவர் காலத்தில் இந்துமதப் பெருமைகளை வெளிநாடுகளில் பேசப்போன விவேகானந்தருக்கு நிதி உதவி செய்தார் என்பதை இணைநோ்வாகக்காணவேண்டும். இதுதான் இந்து மதத்தின் கடந்தகால நிலை.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் (20.07.1899) நாடார் கோயில் நுழைவுத் தொடா்பான வழக்கில் நீதிபதியின் தீர்ப்பு இந்து மத சாஸ்திரத்தின் அடிப்படையில் தான் அமைந்தது. (மது தயாரிக்கும் சாதி கோயிலுக்குள் போனால் தீட்டு கழிக்கனும், பிறர் கோயிலில் நுழைந்தால் ஆன்மீகப் பலனில்லையாம்) சேதுபதி தொடுத்த வழக்கில் பசும்பொன் முத்துராமலிங்கனாரின் பாட்டனார் வௌ்ளைச்சாமிக்கு இந்த நிகழ்வுகளில் பங்கு இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்துமத சாஸ்திரங்களைக் குறிப்பிட்டு நாடார் இனமக்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி வரதராவ், பழந்தமிழ் இலக்கியங்களை மீட்டதாகக் கொண்டாடப்படும் உ.வே.சாமிநாத ஐயரைஇந்துமத சாஸ்திரங்களின் நம்பகத் தன்மைக்கும், புனிதத் தகுதிக்கும் சான்றாக நிறுத்துகிறார். இது குறித்து விரிவாகக் காணலாம்.

மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா. (அ.ப. நடராசன், உடுமலை)

பழைய மரபு

அந்தக் காலத்தில் பாண்டிய நாட்டில் கோவில்களில் நாடார்கள் புகுவது இல்லை. எத்தனையோ நாடார்கள் நல்ல பழக்கங்களை உடையவர்களாகவும், சிவ பக்தியில் சிறந்தவர்களாகவும் இருந்தார்கள். என்றாலும், நாடார் என்னும் ஜாதியை எண்ணி, அவர்களைக் கோவிலுக்குள் விடுகிற பழக்கம் இல்லாமல் இருந்தது.

இராமநாதபுரம் ஜமீனைச் சேர்ந்த கிராமம் கமுதி. அங்கே மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் இருக்கிறது. நாடார்கள் அந்தக் கோவிலுக்குள் புகுந்தார்கள். மற்றவர்கள் அதைத் தடுத்தார்கள். இதனால் ஒரு கலகமே உண்டாயிற்று.

தம்முடைய ஜமீனைச் சேர்ந்த கிராமம் ஆகையால், பழைய மரபை மாற்றக் கூடாது என்கிற எண்ணத்தைக் கொண்ட அரசர், அவ்வாறு கோவிலுக்குள் புகுந்த நாடார்கள் மீது ஒரு வழக்கு போட்டார். பல காலமாக இருந்துவந்த பழக்கத்தை மாற்றுவதால் தமக்குப் பழி வரலாம் என்கிற எண்ணத்தில் அவ்வாறு செய்தார். அவருக்கே பல நாடார்கள் நண்பர்களாய் இருந்தார்கள். என்றாலும் நட்பை உத்தேசித்து மரபை மாற்றக்கூடாது என்கிற உறுதியான எண்ணம் உடையவராக இருந்ததால் அந்த வழக்கைப் போட்டார்.

மதுரை சப்-கோட்டில் விசாரணை நடந்த்து. டி.வரதராவ் என்பவர் அப்போது சப்-ஜட்சாக அங்கே இருந்தார். ஆசிரியப் பெருமானை அங்கே வந்து சாட்சி சொல்ல வேண்டுமென்று சொன்னார்கள். மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களே ”நீங்கள் வந்து சாட்சி சொன்னால் எனக்கு மிகவும் பலமாக இருக்கும்” என்று கேட்டுக்கொண்டார்.

ஆசிரியப் பெருமான் (உ.வே.சா) அப்படியே போய், சாட்சி சொன்னார். நாடார்களைப் பற்றி இழிவாகக்  கூறாமல் அவர்களில் எத்தனையோ பக்தர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி, ஆனாலும் மரபு பிறழக்கூடாது என்று வற்புறுத்தினார். அதன் பிறகு சப்-ஜட்ஜ் தீர்ப்புக் கூறினார். அந்தத் தீர்ப்பில் ஆசிரியரைப் பற்றிச் சிறப்பாக அந்த நீதிபதி சொல்லியிருந்தார்.

இந்தச் சாட்சியை அளித்தவர் கும்பகோணம் கல்லூரி தமிழ் ஆசிரியராக இருக்கிறவர். தமிழில் உள்ள பழைய நூல்கள் பலவற்றை ஆராய்ந்து பதிப்பித்துக் கொண்டிருக்கிறவர். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி ஆகியவற்றைப் பதிப்பித்திருக்கிறார். அந்நூல்களுக்கு உரையும் எழுதியிருக்கிறார். டாக்டர் போப் துரை முதலியவர்கள் அவருடைய புலமைத் திறத்தையும், அவரது பெருமையையும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். அவருடைய சாட்சி இந்த வழக்குக்கு மிகவும் தகுதியானதாய் இருக்கிறது. அவர் நடுநிலைமை பிறழாமல் உண்மையை உணர்ந்து சொல்கிறார். ஆகையால் அவருடைய சாட்சி மிகவும் கவனத்திற்குரியதாய் இருந்தது. இத்தகைய சிக்கலான விஷயங்களில் அத்தகைய பெரியவர் சாட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்த்து என்று விரிவாக எழுதினார்.

ஆதாரம். என் சரித்திரம் உ.வே.சா தன் ஆசிரியர் பற்றி கி.வா. ஜகந்நாதன், பக்கம்.793-794

 

இப்படியான கோயில் நுழைவு உரிமைப் போராட்டங்களில் தங்களுக்கான உரிமை மறுக்கப்பட்டதால் சுயமரியாதை இழந்த நாடார் மக்கள் பெரியார் ஈ.வெ.ராவின் இயக்கத்தில் இணைந்தனர் என்கிறார் லஜபதியார். கமுதி நுழைவுப் போராட்டத் தடைக்குப்பின் சுமார் 42 ஆண்டுகளுக்குப் பிறகே நாடார்களின் ஆலய நுழைவு உரிமை கைவரப் பெற்றது. அப்படி கைவரப்பெற்ற அப்போராட்டம் 8.7.1939இல் நடந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவுப் போராட்டம் தலைமை வைத்தியநாத அய்யா் கோயில் நிர்வாகி ஆர்.எஸ்.நாயிடுவின் ஆதரவு என அரசின் ஆதரவோடு இப்போராட்டம் நடந்தது என்பார் இந்நூலாசிரியா். வைத்தியநாத அய்யின் தலைமையிலான இப்போராட்டம் பற்றிய மாற்று நோக்கை இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்.

இந்து மதத்தின் மறுநிர்மானத்  – புத்துருவாக்கத் – தேவை இசுலாமிய மக்கள் தொகையை இரண்டாம் நிலைக்குத்தள்ளி பார்ப்பனிய மதத்தை (வேத மதத்தை) மக்கள் தொகை வகையிலும் முதல் நிலையில் நிறுத்துவது என்பதோடு தொடா்புடையது. ஆகவேதான் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூத்திர (பிற்படுத்தப்பட்ட) சாதிகள், பஞ்சம (தாழ்த்தப்பட்ட) சாதிகள் வன ஆதிவாசி (பழங்குடி) கூட்டங்கள் என அனைத்தையும் தொகுத்து ஒரு பெருமதமாக மறுவார்ப்படம் செய்கிறார்கள். இந்த கொள்கை திட்டத்தின் ஒரு வேலைப்பிரிவினையே கோயில்நுழைவு (கோயிலுக்குள் கொண்டுவந்து சோ்த்தல் – முன்பு பகைநாட்டு செல்வங்களை, இப்போது பகையாய் நின்ற குடிகளை) இதற்கான கருத்தியல் தலைமையாக அன்றைய சீர்த்திருத்தவாதிகள் வைதீகமீட்புவாதிகள்) தொழிற்பட்டனா். அதற்கான உள்ளுர் கருத்தியல் முகவரே ”வைத்தியநாதரய்யா்” ஆவார். அவருக்கான ‘பாதுகாப்பு பயில்வானே’ முத்துராமலிங்கனார். இதற்குமேல் இந்த நோ்வுகளில், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான கூறுகள் இவற்றில் ஏதுமில்லை. ஆனால் நூலாசிரியா், நாம்முன் வைக்கிற இவ்வரசியலை நன்குணா்ந்தவா் என்ற போதும், நூலில் வரம்புக்குட்பட்ட அந்தப் பகுதி ‘கோயில் நுழைவையே’ முற்று முழுதான விடுதலை நடவடிக்கையாக காணும் பிசகுக்கு ஆளாகிறது. அம்பேத்கா், பெரியார் போன்றோரும் கோயில் நுழைவை விடுதலைக் கூறாக பிறழ உணா்ந்து பின்னாளில் முற்றுமுழுதாக வேறுவேலைத் திட்டங்களில் கவனம் செலுத்தியது இங்கு  நோக்கத்தக்கது.

 

 கோயிலுக்குள் நுழைய அனுமதிகிடைக்காத மூக்கன் நாடார்: இந்து சனாதன தர்மம்

1855இல் எட்டையாபுரம் எஸ்டேட் நிலவரி வசூலிப்பவர் கோவில்பட்டி, கழுகுமலை ஊரின் மையப்பகுதியில் (தேரடி) நாடார்கள் ஊர்வலம் செல்லக்கூடாது என நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார். இதை எதிர்த்து நாடார்கள் ரோமன் கத்தோலிக்க கிறித்தவ சமயத்திற்கு மாறினர். இதைத் தொடா்ந்து தோ்த்திருவிழா கலவரம்; 7 நாடார்கள் படுகொலை; இதற்கு காரணமான எட்டையாபுரத்தில் ஜமீன் பணியாற்றிய பார்ப்பன மேலாளர் மற்றும் இரு அடியாட்கள் நாடார்களால் கொலை செய்யப்பட்டனர்.

1884இல் மீனாட்சியம்மன் கோயிலில் நுழைந்த மூக்கன் நாடார் தாக்கப்பட்டார். ஆலய ஊழியா்களால் கோயிலின் வெளியே உள்ள துணிக்கடை வரை அடித்து தள்ளப்பட்டார். இப்படியான துன்பத்திற்கு உள்ளான மூக்கன் நாடார் வழக்குத் தொடா்ந்தார். அவ்வழக்கில் இந்து சனாதன தர்மத்தின்படி மூக்கன் நாடார் கோயிலுக்குள் நுழைய உரிமை அற்றவர் என்பதால் அவர் கோயிலில் நுழைந்திருக்கக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்த வன்மத்தை மறக்கமுடியுமா?.

பார்ப்பனர், வௌ்ளாளர், மறவர்கள் நிகழ்த்திய சிவகாசி கலகம்:

1890 -களின் இறுதியில் நாடார்கள் மீது நடந்த சிவகாசி கொலைவெறித் தாக்குதல் மிகப் பயங்கரமானது. 1895-இல் இராமநாதபுரம் சிவகாசி சிவன்கோயில் அறங்காவலா் பதவிக்கு உரிமைக்கேட்ட நாடார்கள் மீதான தாக்குதலாகவும் சிவகாசி சிவன் கோயிலில் நாடார்கள் நுழைந்து விடுவார்களோ என்றும் சிவகாசி தாக்குதல் நடந்து முடிந்தது. இதில் அத்துமீறி வௌ்ளாளர், மறவர் எனப் பலரும் கோயிலின் புனிதத்தை காக்கும் தரப்பில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் நாடார்களுக்கு இசுலாமியா்களே பாதுகாப்புத் தந்தனர். தொடா்ந்து இந்துசமயத் தாக்குதலுக்கு உட்பட்ட சிவகாசி, தென்காசி – செங்கோட்டை நாடார்கள் நூற்றுக்கணக்கானோர் இசுலாத்துக்கு மாறினர். நாடார்களின் கோயில் நுழைவு உரிமைப் போராட்டங்கள் தோல்வியில் முடிந்த காலக்கட்டத்தில் ”தாங்கள் இந்துக்கள் இல்லை” என எண்ணினர் (ப.26) சிவகாசி வன்கொடுமை நடந்த பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட மறவர் ஒருவரின் இதழில் நோ்காணலில் அந்த மறவர், நாடார்களை கோயிலுக்குள் அனுமதித்தால் பள்ளர் மற்றும் கள்ளர் சமூகங்களும் கோயில் நுழைவு உரிமையைக் கோருவார்கள் என்றான். இச்செய்தியை 17.6.1899 – ஆம் ஆண்டு மெட்ராஸ் மெயில் எழுதியது என்று மிக நுனுக்கமாக செய்தியொன்றையும் பதிவு செய்கிறா நூலாசிரியர்.

நாடார்களுக்கு ஆதரவாய் அருந்ததியர்:

சிவகாசி கலவரத்தை நாட்டார் பாடல்கள் (folk songs) பதிவுசெய்துள்ளது. அப்பதிவுகள் சில உண்மைகளை வெளிச்சமிடுகின்றன.

நாலுபேரு அண்ணன் தம்பி

நடுவப்பட்டி வௌ்ளை ஐயா

பொட்டி ஓடைக்கு முன்னே

வீரமறத்தி பெற்ற

வீரமுள்ள வௌ்ளை ஐயா

சாலாச்சி சந்நிதியைத்

தானடைக்கச் சொன்னாரையா

மொட்டைய நாடார் மகன்

முதக்குட்டி செம்புக்குட்டி

வௌ்ளையத் தேவரிடம்

வெட்டுப்பட்டு சாகுறானே

பாஞ்சாலம் குறிச்சியில்

பகட மக்க ரெண்டுபேரு

அந்தரம் அடிச்சல்லவோ

தந்திரமா வெட்டினானே

என்ற பாடல், சிவகாசி வன்கொடுமை நிகழ்வில் நாடார்களுக்கு எதிராகத் தலைமை தாங்கிய வௌ்ளையத்தேவன் விசலாட்சி கோயிலுக்கு நாடார்கள் நுழைவதை தடுத்து கோயிலை அடைக்க சொன்னான். அங்கு நுழைய முயன்ற இருநாடார்களைக் கொன்றான். அப்போது நாடார்களுக்கு ஆதரவாக பாஞ்சாலங்குறிச்சி அருந்ததிய இளைஞா்கள் வெள்ளைத் தேவனைக் கொன்றனர் என்கிற செய்தியை அம்பலப்படுத்துகிறது.

தூத்துக்குடி, மலையாளம், திருநெல்வேலி, சுரண்டை, தேநீர் குளம், சாத்தூர், அகிலாண்புரம், ஒட்டநத்தம், அருங்குளம், சிவனணஞ்சபுரம், நாகலாபுரம் எனப் பல இடங்களிலும் நாடார்கள் தொடா்ந்து தாக்கப்பட்டு வந்தனர். கமுதி, சிவகாசி பகுதி நாடார்கள் கோயிலுக்குள் நுழைந்ததைச் சகித்து கொள்ளமுடியாத ஆதிக்க சாதிகள் தங்கள் வசிப்பிடத்தைவிட்டு வெளியேறினர் என்பதை வாய்மொழிப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

அய்யா வைகுண்டர்: சனதான எதிர்ப்பாளர்

கேரளாவின் ஈழவ நாராயண குருவைப் போன்று தமிழகத்தில் சனாதனத்தை எதிர்த்துப் போராடியவர் அய்யா வைகுண்டராவார். இவர் காலத்தில் நிலவிய கொடிய மனுதர்ம சட்டங்களாக பெண்களுக்கு இருந்த தோள்சீலை அணியக்கூடாது, இடுப்பில் குடம் எடுத்தல் கூடாது, பொன்வளையல் அணியக்கூடாது என்பனவும் ஆண்களுக்கு தலைப்பாகைக் கட்டக்கூடாது, மீசை வளர்த்தல் கூடாது, உயா்சாதியினர் பயன்படுத்தும் வளைந்த குடையினைப்பிடித்துச் செல்லல்கூடாது மற்றும் உயா்சாதியினர் பேசுகின்ற மொழிநடையினைப் பயன்படுத்தக்கூடாது என எண்ணற்ற ஏற்றத்தாழ்வுடைய கொடிய நடைமுறைகளை எதிர்த்து செயல்பட்டவராக அய்யா வைகுண்டா் இருந்தார்.

அய்யா வைகுண்டரின் பதிவுகள் பெரும்பாலும் ஆண்பெண் பேதமில்லை; சாதிமத பேதமில்லை; வீண் சடங்குகள் இல்லை; உருவ வழிபாடில்லை என்பனவும் கோயிலுக்காக (தாழ்த்தப்பட்டவர்களை) பலியிடும் சடங்கினை எதிர்த்தல், உழைக்கும் மக்களைச் சுரண்டுகின்ற காணிக்கை முறையினைத் தவிர்த்தல் போன்றவை அவரின் செயல்பாடுகளாக இருந்தன. இத்தகைய சனாதத்தன்மைகளை எதிர்த்துக் களமாடிய காரணத்தினால் 1838 -ஆம் ஆண்டு 110-நாட்கள் திருவனந்தபுரத்தில் சிறை வைக்கப்பட்டார்.

பார்ப்பனர்களுக்கு மட்டும் இரண்டு வேளை இலவச உணவு வழங்கப்பட்டது. மன்னரது ஆளுகைக்கு உட்பட்ட இந்து கோவில்களில் அத்தகைய ஒருசார்புடைய சனாதனத்தை எதிர்த்து வைகுண்டா் உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்தி சமபந்தி போஜனத்தை வலியுறுத்தி செயல்பட்டார் என்று நூலாசிரியா் சுட்டுகிறார்.

2013- ஆண்டு மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பாடத்தில் ‘சாதிமுரண்களும், உடை மாற்றங்களும்’ என்னும் தலைப்பில் திருவிதாங்கூரில் தோள்சீலை அணியக்கூடாது என்ற நாடார் சமூகத்தின் வரலாற்று உண்மைகள் ஆறு பத்தியளவில் இடம்பெற்றிருந்தது. மேலும் நாடார்களின் தொழிலாக கள் விற்பனையும் உயா்சாதியினருக்குச் சேவை செய்யும் அடிமையாகவும் இருந்த வரலாற்றை அப்படியே பாடத்தில் இடம்பெற்றிருந்தது. இவ்வாறு இடம்பெற்ற பாடமானது நாடார் சமூகத்தை இழிவுசெய்வதாகத் தமிழன் தொலைக்காட்சியின் உரிமையாளர் கலைக்கோட்டு உதயன் என்பவர் ஒரு ரிட் மனு அளித்தார். அம்மனுவில் ஆறு பத்தியில் இடம்பெற்றிருந்த நாடார் (சாணார்) வரலாற்றில் பெண்கள் தோள்சீலை அணியக்கூடாது என்ற சனாதனச் சட்டத்தினை எதிர்த்து போராடி தோள்சீலை அணியும் உரிமையை கோரியதும் அன்றைய ஆதிக்கச் சாதியினர் பொதுவிடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நாடார் சமூகத்து பெண்களில் மேலடையைக் கிழித்து வன்மத்தை வெளிப்படுத்திய வரலாறு இன்றைய தங்கள் சமூகத்தை இழிவுபடுத்துகிறது என்றும் அப்பாடத்தினை நீக்கக்கூறி வாதிட்டனர். ஆனால் லஜபதிராய் அவர்கள் அப்பாடத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அப்படியே இடம்பெற்றால்தான் உண்மை வரலாறு வெளிப்படும் என்கிறார். மேலும் வரலாற்றில் அவமானப்படுத்தப்பட்ட நாடார்கள் இன்று வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல் இந்து சனாதனவாதிகளுடன் சோ்ந்து களமாடுகின்றனர் என்பதே லஜபதியின் சினமாகும்.

சாதித்தீண்டாமைச் சுவருடைத்த ஏசுசபையினர்:

கிறிஸ்தவ தேவாலயங்களுக்குள்ளும் நாடார்கள் சாதிய சிக்கலுக்கு உள்ளாயினர். நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயம் 1752 -இல் கட்டப்பட்டது. அதில் தென்பகுதியில் வேளாளர், முதலியார், கம்மாளர் (சூத்திர சாதிகள்), ஆகியோரும், வடபகுதியில் நாடார்கள், பள்ளர் அமா்ந்து வழிபட வேண்டும். எனவும் அமா்ந்து வழிபடும் இடத்தில் இருபிரிவினருக்கும் இடையே சாதி – தீண்டாமைச் சுவர்களும் எழுப்பப்பட்டன. 1877 முதல் 1910 வரை இச்சிக்கல்கள் தொடா்ந்தன. இதில் தலையிட்டவர் கௌசானல் எனும் அருட்தந்தை ஆவார்.1910இல் கௌசானல், சாதிய தீண்டாமை கடைபிடிக்கும் வேளாளர்களை தேவாலயத்தில் நுழைய தடைவிதித்தார். 1910இல் நெல்லை மறை மாவட்டத்தலைவர் உத்தரவின்படி தீண்டாமைச் சுவரை இடித்துத் தரைமட்டம் ஆக்கினர் யேசு சபையார்.

இதை ஒத்துக்கொள்ளாத பிள்ளை, முதலியார், வகுப்பினரான மிக்கேல் பிள்ளை, ஞானப்பிரகாசம்பிள்ளை திரவிய முதலியார் ஆகியோர் நெல்லை சார்பு நீதிமன்றத்தில் தீண்டாமைச் சுவரைக் கட்டியெழுப்பவேண்டும் எனவாதிட்டனர். வேளாளர், முதலியார் ஆகியோரின் சாதிவெறியும் நீதிமன்றமும் கூட்டாக மிகக் கேவலமான முறையில் நடந்துகொண்டது. சுவரைக் கட்டவேண்டும் என்றும் நாடார்கள் தெற்குப் பகுதிக்குச் செல்லகூடாது என்றும் வழக்குக்கான செலவுத்தொகையை கொடுக்கவேண்டும் என உத்திரவு இட்டது.

22.10.1913-இல் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம், கிறிஸ்தவ சபையின் மேல் முறையீட்டை அனுமதித்து, கீழமை சார்பு நீதிமன்றத்தின் மோசமான உத்திரவை ரத்துசெய்தது. கிறித்தவ அருட்தந்தையா்கள், போராடிப் பெற்றுத்தந்த இந்த உரிமையைக் கவனப்படுத்துகிறார் இந்நூல் ஆசிரியரும் வழக்கறிஞரான லஜபதியார்.

காமராசா்: பசுரட்சகா் அரசியலுக்கெதிரானவா்

கடந்த காலங்களில் திராவிடக் கழத்தினரும், இன்குலாப், எஸ்.வி.ஆர் போன்றோரும் காமராசரின் சமூகப்பணிகளை சிறப்பாகப் பேசியுள்ளனர் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்நூல் தொடா்ச்சியாகக் காமராஜரின் ஆட்சிக் காலத்தைப் பற்றியும் பேசுகிறார் லஜபதி அவர்கள். நாடார் சமூகத்தில் பிறந்த காமராஜா் இந்துமதவாத வெறிக் கெதிராகச் செயல்பட்டவர். 1966-இல் இந்து மதவெறியா்கள் கிளர்ச்சி செய்தனர். சங்கராச்சாரியார் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். பசுவதைக்கு எதிராகச் சட்டம் இயற்றவேண்டும் என இந்து அடிப்படைவாதிகள் கோரிக்கை வைத்தபோது காமராசா் (காங்கிரசின் தலைவராக) அதை நிராகரித்தார். 10000 போ் கொண்ட இந்துமத (சாதுக்கள், சாமியார்கள்) வெறிக்கும்பல் டெல்லியில் கலவரம் செய்தது. காமராஜரின் வீட்டுக்குத் தீவைத்தது. இன்றைக்கும் பசுரட்சகா் (Gorakshakes) அரசியல் தொடா்வதை காமராஜா் வரலாற்றைப் பேசுவதன் மூலம் முன்வைக்கிறார் லஜபதிராய்.

இன்றைக்கு வளர்ந்துவரும் இந்துமதவெறிச் சூழல் அபாயகரமானதாக உள்ளது. நாடார் போன்ற சமூகங்கள் தங்களை இந்து மதத்தவராகவும் குறிப்பாக சத்ரிய குலத்தவராகவும் அறிவித்துக்கொண்டு செயற்படும் நிலையில் கடந்த காலங்களில் நாடார் வகுப்பில் பிறந்து சுயமரியாதை வீரராகச் செயற்பட்ட பட்டிவீரன் பட்டி டபிள்யூ.பி.ஏ. சௌந்தர பாண்டியனாரின் பணிகள் குறிப்பிடத்தக்கதாகும். பிறப்பால் நாடார் வகுப்பில் பிறந்து கறுப்புச் சிந்தனையாளராகச் செயல்பட்டவர் சௌந்தரபாண்டியனராவார். சாதிய எல்லைகளைக் கடந்து பிற தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் உழைத்தவர் இவரின் வரலாற்றை இதுவரை சிலரே கவனப்படுத்திய நிலையில், லஜபதி நல்ல சில குறிப்புகளைப் பதிவுசெய்கிறார்.

மதக்கலவரம் ஆய்வுக்குரியது. இந்து மதத்தை விட்டு வெளியேறும் ஒடுக்கப்பட்ட மக்களை வன்மத்தோடு தாக்குவதே இங்கு மதக்கலவரத்தின் வரலாற்று அடிப்படை (இந்து மீட்புவாத நோக்கில்) இந்து மதத்திற்குள் சனாதனத்தை ஏற்காமல் வெளியேறிய ஒடுக்கப்பட்ட மக்களை தன்னிடம் அடிமையாக இருந்த பணியாள் ஓடிவிட்டானே என்கிற எஜமானத்திமிரே பொதுவாக மதக்கலவரமாகச் சித்தரிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் 80-களில் கிறிஸ்தவ மீனவர்களையும் இந்து நாடார்களையும் பிரிக்கிற வேலையைச் செய்தது ஆர்.எஸ்.எஸ் இந்துமுன்னணி.

சான்றாக 1978 நவ.7இல் கன்னியாக்குமரியில் ஏற்பட்ட முதல் மதக்கலவரம் 1981 – 82 மண்டைக்காடு கலவரம். இக்கலவரங்களில் அரசியல் பலனை அறுவடை செய்தவர்கள் இன்றைய பாரதிய ஜனதா கும்பல். மேலும் 1980க்கு பின்னர் “இந்து ஓட்டு இந்துவுக்கே” என சமூகத்தைப் பிளவுபடுத்தும் (polarization) முழக்கத்தை கன்னியாக்குமரியில் வைத்து, 2014 ஆண்டுகளில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வென்று பா.ஜ.க. கும்பல் வலுபெற்றது.

மண்டைக்காட்டு கலவரத்தின் பயனாய் இன்றுவரை கடற்கரையோர நாடார், மீனவக் கிராமங்களில் பகைமை மறையா உணா்ச்சியும் அச்ச உணா்வும் தொடா்கின்றது. தாணுலிங்க நாடார் பற்றி லஜபதி சுட்டிக்காட்டுகிறார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருமுறை தோ்வுசெய்யப்பட்டவர் தாணுலிங்க நாடார் இவரது. ஆர்.எஸ்.எஸ் அமைப்போடான நெருக்கம் பின்னாளில் இந்துமுன்னணி அமைப்பின் தலைவராக உருவாக்கியது. இந்து மதத்தால் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் உறுப்பினரே இந்துமத வெறியைப் பரப்பும் அந்த அமைப்புக்கே தலைவராவது எவ்வளவே பெரிய முரணிழிபு (Irony).

நாடார்களில் அம்மாவழி நாடார்களே சமஸ்கிருதமயத்திற்கு ஆட்பட்டவர்கள்; இவர்களுக்கு தோள்சீலைக் கலகம் பற்றியோ ஆலய நுழைவுப் போராட்டம் பற்றியோ அறிவுமில்லை. அறிந்துகொள்ளும் ஆா்வமுமில்லை. இவர்களே பிற மக்கள் பிரிவினரிடம் மோதல் போக்கைத் தூண்டுகின்றனர். காவிமயப்பட்ட திருவிளக்கு பூஜை, சமஸ்கிருத மந்திர உச்சாடனங்கள், இந்து சமயச் சொற்பொழிவு போன்ற சடங்கின்வழியாக நாடார்கள் காவியமயமாக்கலை தழுவுகின்றனர். அம்மாவழி நாடார்களே கன்னியாக்குமரி ஆர்.எஸ்.எஸ் இன் காலாட்படை என்பதே லஜபதியின் முடிபு. இந்து தீவிரவாத அரசியல் ஓர்மையை நாடார்களின் வகுப்பிற்குள் இருக்கும் சில (மளிகை வணிக) பணக்காரக் கும்பல்களே வளர்த்து வருகின்றனர் என்கிறார் இந்நூலின் ஆசிரியர்.

இந்த பணக்காரக் கும்பல்கள் திருவிதாங்கூர் மன்னர் காலம்தொட்டு தொடா்ச்சியாக நிலவுரிமையும் கோவில் சொத்துக்களைப் பராமரிக்கும் உரிமை பட்டங்களை பெற்றிருந்தனர். கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாக சிறப்புரிமைகளைப் பெற்ற சிறு எண்ணிக்கையிலான இப்பணக்கார கும்பல்கள்தான் (குடும்பம்) நாடார்கள் மீது இழைக்கப்பட்ட சாதியத் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக ஒருசிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. அகஸ்தீஸ்வரம், ராஜாக்க மங்கலம், குட்டம், பொற்றையடி போன்ற பகுதிகளில் வாழ்ந்த இந்த பணக்காரக் கும்பல்கள் தோள்சீலைக்கு போராடிய, ஆலய நுழைவுக்கு போராடிய, நாடார்களுக்கு எதிராகவே இருந்தனர். சொத்துகள் ஏதுமற்ற சாணார் பெண்கள் தோள்சீலை அணியக்கூடாது என திருவிதாங்கூர் மகாராஜாவுக்கு விண்ணப்பம் போட்டு சனாதனத்துக்கு புத்துயிரூட்டினர்.

பொன்.ராதாகிருஷ்ணன், தாணுலிங்க நாடார் (மறைவு), எஸ்.டி.பாண்டியனார் (மறைவு) ஆகியோர் உள்ளிட்ட நிலவுடைமை சமஸ்கிருதமயத்திற்கு உள்ளான இந்த தளைக்கட்டுகள் (குடும்பத்தினர்தான்) ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து தீவிரவாத அமைப்புகளில் முன்னோடிப் பாத்திரம் வகித்து வருபவர்கள் என்னும் செய்தி குறிப்பிடத்தக்கது.

17.8.1982 நீதியாசா் வேணுகோபால் அளித்த மண்டைக்காடு கலவரம் பற்றிய விசாரணையறிக்கை இங்கே குறிப்பிடத்தக்கது. இவ்வறிக்கை பல்வேறு அம்சங்களை முன்வைக்கிறது. சிறுபான்மையினருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு செய்துவரும் தீவிர இந்துமதவெறி பிரச்சாரத்தால் பல ஆண்டுகளாக இணக்கமாக வாழ்ந்துவந்த இந்துக்களும் கிறித்தவர்களும் ஒரே நாளில் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபடுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸின் சிந்தாந்த அபாயங்களுக்கு எதிராக மக்களுக்கு கல்வியளிப்பது அவசியமாகிறது என்றெல்லாம் தன்னுடைய 197 பக்க அறிக்கையில் வேணுகோபால் முன்வைக்கிறார். இவ்வறிக்கையின் ஐந்து முக்கிய கருத்துகள் அடங்கியிருந்தபோதும் ஒருமுக்கிய அம்சம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தம் இந்த நாட்டை மாட்டுச்சாண காலக்கட்டத்திற்கு பின்நோக்கித் தள்ளிவிடும். ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தம் மனிதநேயமும் அறிவியல் சார்ந்த எண்ணங்களையும் ஆராய்ச்சி மனப்பாங்கையும் ஏற்படுத்தாது. திராவிட கலாச்சாரத்திற்கு எதிரானதே ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தம்.

ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தங்களின் தீயவிளைவுக்கெதிராக கருத்தியல் சிந்தனைகளை மக்களிடம் விளக்கவேண்டும் என்கிற வேணுகோபாலின் அறிக்கையை லஜபதிராய் குறிப்பிடுகிறார். காவிமயமாகிவரும் நாடார்களின் வரலாறுகளைப் போலவே ஒருபானைச் சோற்றிற்கு ஒருசோறு பதமாகத் தமிழகத்தின் சாதிகள் காவிமயமாகிவருகின்றன.

தொகுத்துரைப்பதெனில்

மத்திய கால கோயில் அரசு மானியத்தில் மேற்கொள்ளபட்ட கலை இலக்கிய ஆக்கங்கள், சநாதன வா்ணதா்மத்திடம் சரணடைந்தன.

நவீனத்துவ காலகட்டத்தைச் சோ்ந்த பல்கலைக்கழக மானியத்தில் மேற்கொள்ளப்படுகிற கல்விவளாக (accadomic) ஆய்வுகள் ’குடிமரபு‘, குடிமேட்டிமை – தன் – குடிமூப்பு வாதங்களிடம் சரணடைந்து தேசிய இனக் கதையாடலிடம் தஞ்சம்புகத் தவியாய் தவிக்கின்றன.

இந்தப் பின்னணியில் தற்சார்பு (Independent) தன் – முயற்சிகளாக மேற்கொள்ளப்படுகிற அரசியல் கூா்நோக்கு மிக்க ஆய்வுகள் மானுட விடுதலை நோக்கிய பயணத்தில் அழுத்தம் திருத்தமாக முன்னேறிவருகின்றன.

லஜபதியாரின் இந்த ஆய்வுநூல் நாடார்களின் குடி – மேட்டிமை வேட்கையையும், தன் – குடிமூப்பு நிலைநாட்டும் ஏக்கங்களையும் உரிய வரலாற்றுச் சான்றுகளோடு மறுத்துரைக்கிறது. மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து மீண்டெழ அக்குடி போராடிய போராட்டத்தையே அதன் மிகச்சிறந்த வரலாற்றுத் தகுதியாக முன்னிறுத்துகிறது. மாறாக ‘சத்ரிய (மன்னர்) உரிமைகோரலின் வழிநின்று, எல்லாக்குடிகளையும் (ஏமாந்தவா்கள், வலிமையற்றோர்) வீழ்த்தி அவா்தம் பொருளை, வளத்தைத் திருடி, அதில் பெருங்கோயில்களை எழுப்பி, அதில் வட ‘வைதீகபுரோகிதா்களை’ இறைத்தரகா்களாக நியமித்து, அவா்கள் ஆணையின்படி ‘வா்ண சமூகத்தை’ நிர்மாணித்து அதன்படி நில, வள, கல்வி, மானியங்களைப் பங்கீடு செய்கிற அற்பக் கதையாடலை அது எள்ளி நகையாடுகிறது.

இங்ஙனம் ‘சத்ரிய உரிமை கோரலுக்காக’ பார்ப்பனிய தலைமையை இயல்பாக ஏற்கும் அதன் அசட்டுத்தனத்தை சுயமரியாதை இயக்கக் கண்ணோடத்தின்வழி கட்டுடைத்துக் காட்டுகிறது. மேலும், வன்கொடுமைகளுக்கு எதிராக (தோள்சீலை அணியத்தடை, வழிபாட்டு உரிமைத்தடை) போராடியது போன்றவற்றின் நினைவுகளை நவீனப்பாடப் புத்தகங்களில் நினைவுறுத்தக்கூடாது என்கிற “புதிய வைசியா்களாக”வும் தன்னை கற்பித்துக்கொண்ட அபத்தத்தையும் தோலுரித்துக்காட்டுகிறது.

வா்ணசாதித் தலைமையினை எதிர்க்கிற போராட்டத்தில் பாதிக்கப்பட்ட வெவ்வேறு சாதி – குடிமரபு வகுப்பாரிடையே (பிற்படுத்தப்பட்டோர் – தாழ்த்தப்பட்டோர்) ஓர் ஐக்கிய முன்னணி உருவாகாமையை வரலாறு நெடுகக் காணமுடிகிறது. நாடார்கள் ஒடுக்கப்பட்ட அதே சமகாலத்தில்தான், தச்சர்கள் (விஸ்வகர்மா) பார்ப்பனர்களின் கோயில் உரிமையின் மீதான அடாவடித்தனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடி வென்றனா். ஆனால் ஒரே காரணத்தால் பாதிக்கப்பட்ட (பாதிப்பின் தன்மைகள் வேறுவேறு) இருதரப்பும் கைகோர்க்கவில்லை. இதுபோலவே பற்பல பிரிவுகள் தத்தமது பாதிப்புகளின் மைய இழையைக் கண்டுணா்ந்து கைகோக்காமல் பார்ப்பனா்களைவிட மூத்தது தங்கள் குடி மரபு அல்லது இணையானது தங்கள் சாதி, குல (தேச வழமைகள்) நாட்டு மரபுகள் என்பதான கதையாடலே  மேலெழுந்துவருகிறது. இதற்கு இசைவாகவே தமிழ்த்தேசக் கதையாடலை (narrative) முன்வைக்கும், கருத்தாளர்களும், பேராசான் ஸ்டாலினை மேற்கோள்காட்டி “பொது உளவியல் உருவாக்கம்” என்கிற மூன்றாவது வரையறைக்கூறை ‘தமிழ்த்தேசம்’ முற்றிலுமாக வரலாற்றுவழியில் நிறைவெய்திவிட்டதாக கதையளந்து வருகின்றனா். முன்னே சொன்ன சம்பவங்களில் போராட்டத்தின்வழி ஐக்கியப்பட்ட பொது உளவியல் உருவாக்கம் எங்கே உருவானது என்று எந்தக் கருத்தாளரும் விளக்குவதில்லை. வெறும் பொருளியல் உற்பத்தி உறவுகளில் ஏற்படுகிற ஐக்கியப்பாடு என்பது, உற்பத்தியாளா் – நுகா்வோர் என்பதாகவே முதலாளித்துவ நாடாளுமன்ற சனநாயகத்தில் சிறுத்துபோய் கொண்டிருக்கிறது.

இந்தத் தன்மையில் நூலாசிரியா், தமிழ்பேசும் மக்களிடையே உள்ள ஆழமாகப் பிளவுபட்டுள்ள வேற்றுமையை அடுத்தடுத்து ஆய்வுக்குட்படுத்த வேண்டும். அந்த ஆழமான பிளவில் நாடார்களின் பங்குபணி எத்தகையது மற்றையோரின் பங்குபணி  எத்தகையது என்பதை அறிவதே தீா்வுநோக்கி நகரவிரும்பும் திசையாக இருக்கும். மாறாக, நாடார்களைப் போலவேதான் மற்ற பிற சாதியினரின் மேனிலையாக்க வேட்கைகளும் ‘சமஸ்கிருதமயத்திடம்’ சரணடைதலும் என்கிற எளிய பொதுமைப்படுத்தல் போதுமானதாக இராது.

-காத்தவராயன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW