திமுக அரசே! இறையூர் வேங்கைவயலில் பட்டியலின சாதி மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சாதி வெறியர்களைக் கண்டுபிடித்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்! கடந்த ஓராண்டில் நடந்த சாதிய வன்கொடுமைகளைப் பற்றி உயரதிகார நீதி விசாரணை நடத்துக!
தமிழக மக்களே! சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து போராடுக!
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

16 Jan 2023



புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர் கிராமம் வேங்கைவயல் தெருவில் பட்டியலின சாதி மக்களின் குடிநீர்த் தொட்டியில் சாதி ஆதிக்கவெறியினர் மலத்தைக் கலந்த கொடூரமான வன்கொடுமை சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அன்று திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையின் உச்சபட்ச கொடூரம் இன்று இறையூரிலும் நடக்கிறது. ”குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என முதல்வர் சட்டப்பேரவையில் உறுதியளித்தார். ஆனால், சாதிவெறி குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு மாறாக அவர்களைப் பாதுகாக்கும் வகையில் திமுக அரசின் காவல்துறை பாதிக்கப்பட்ட பட்டியலின சாதி மக்களையே விசாரணை என்ற பெயரில் அழைத்து குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாக ஒப்புக் கொள்ளுமாறு ஆசை காட்டியும் மிரட்டியும் அடித்து அச்சுறுத்தியும் செல்போன்களை பறிமுதல் செய்தும் வருகின்றது. ஏற்கெனவே சாதிவெறியர்களின் வன்கொடுமைக்கு வேங்கைவயல் மக்கள் ஆளாகி இருக்கும் நிலையில் அவர்களில் ஒருசிலரின் மீதே பொய்யாக பழிசுமத்த முயல்வது அரசே நிகழ்த்தும் சாதிய வன்கொடுமையாகும், அரசும், அதிகாரிகளும், ஆதிக்க சாதி அதிகார வர்க்கமும் சேர்ந்துகொண்டு நடத்தும் சாதிய ஒடுக்குமுறையாகும். இது மிகுந்த கண்டனத்திற்கு உரியதாகும்.

இன்னொருபுறம் பாதிக்கப்பட்ட மக்களை அரசு தரப்பில் எந்தவொரு அமைச்சரும் நேரடியாக சென்று பார்க்கவில்லை என்ற விமர்சனம் நீடித்துவருகிறது. அதுமட்டுமின்றி, எந்த கோவிலுக்குள் பட்டியலின சாதி மக்களை மாவட்ட ஆட்சியர் அழைத்துச் சென்றாரோ அதே கோயிலுக்குள் மீண்டும் அம்மக்களை நுழையவிடாமல் தடுக்கும் செய்தியும் வந்துள்ளது. பட்டியலின சாதி மக்கள் கோயிலுக்கு சென்று வந்த பிறகு சாதி ஆதிக்க ஆற்றல்கள் கோயிலுக்கு தீட்டுக் கழித்துள்ளனர். ஏற்கெனவே, கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தவர் , இரட்டைக் குவளை முறையைக் கடைபிடித்தவர் ஆகிய இருவரும் சிறைப்படுத்தப்பட்டாலும் அவர்கள் மீது எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்படவில்லை. இவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது பாதிக்கப்பட்டோர் பக்கம் நின்று சாதிவெறியர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக தமிழக அரசு சாதி வெறியர்களைப் பாதுகாக்க முயல்வதை அறிய முடிகிறது.

இம்மாவட்டத்தில் ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவர்கள் பட்டியலின சாதி மக்கள் மீது தொடர்ந்து சாதிய ஒடுக்குமுறைகளை நிகழ்த்தி வருகின்றனர். இறையூரிலும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் கோயிலில் நுழையத் தடை, இரட்டை குவளை முறை, கடைகளில் பொருட்களைக் கொடுக்க மறுப்பது, கல்விக் கூடத்தில் பாகுபாடு காட்டுவது என வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அங்கு மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்றாலும் மேற்படி கூற்றுக்கு சான்றாக, தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தமிழக அரசிடம் கேட்ட பொழுது தமிழகம் முழுவதும் 341 கிராமங்களில் பட்டியலின சாதி மக்கள் மீது தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக அரசே பதிலளித்திருப்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, இறையூர் கொடுமை என்பதை ஏதோ சில விசமிகள் தெரியாமல் செய்துவிட்டது போலவும், இதை சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகவும் மாற்றுவதற்கு திமுக அரசு முயலக்கூடாது.

பாசிச பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து இந்தியா முழுவதும் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது. ஆர் எஸ் எஸ் சங் பரிவார அமைப்புகள் தமிழகத்தி்ல் வேரூன்ற சாதிக் கட்சிகளோடு கூட்டு வைத்து செயல்படுவதை தனது செயல்தந்திரமாக வகுத்து செயல்படுகிறது. இது சாதி ஆதிக்க சக்திகளுக்கு அரசியல் பலத்தை அளித்திருக்கிறது.

சாதிய வன்கொடுமையில் ஈடுபட்ட சாதி ஆதிக்க சக்திகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் தமிழக அரசைக் கோருகிறோம். மேலும், கடந்த ஒராண்டில் தமிழகம் எங்கும் நடந்த சாதிய வன்கொடுமைகளைப் புலனாய்வு செய்வதற்கு ஜனநாயக இயக்கங்களின் பிரதிநிதிகள், நேர்மையான நீதிபதிகள் மற்றும் அனைத்து சாதி உழைக்கும் மக்கள் அடங்கிய புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தியும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் அனைத்து சாதி உழைக்கும் மக்களும் போராட முன்வர வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.
15/01/2023

இப்படிக்கு

பாலன்,
ஒருங்கிணைப்பாளர்,
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW