மூணார் மண்ணில் புதைந்த தேயிலைத் தோட்ட தமிழ்த் தொழிலாளர்கள், இரத்தம் குடிக்கும் டாடாவின் கண்ணன் தேவன் நிறுவனமும், தொடர்ச்சியாக காவுகொடுக்கும் கேரள அரசும்!
மூணார் மண்சரிவில் புதைந்து உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிளாலர்களுக்கு சோசலிச தொழிலாளர் மையம் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறது.
மூணாரில் இருந்து சுமார் 20 கிலேமீட்டர் தொலைவில் உள்ள பெட்டிமுடியில் டாடா நிறுவனத்தின் கண்ணன் தேவன் தேயிலை தோட்டத்தில் (எஸ்ட்டேட் எண்-30) 07/08/2020 இரவு பெருமழை வெள்ளத்தினால் ஏற்பட்ட நிலசரிவில் 84 தமிழ்த் தொழிளாலர்கள் மண்ணில் புதைந்துப் போயினர். இதுவரை 42 உடல்கள் கண்டெடுக்கபட்டு இருக்கிறது. பேரிடர் மீட்பு குழுவோடு இணைந்து இஸ்லாமிய இயக்கங்கள், பல அரசியல் இயக்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொரோனா ஊரடங்கையும் மீறி மீட்பு பணி செய்து வருகிறார்கள். ஆனால் ஆளும் கேரள சி.பி.எம் அரசோ விமானவிபத்தில் இறந்தவர்களுக்கு 10 இலட்சமும், மண் சரிவில் இறந்த தமிழ்த் தொழிலாளிகளுக்கோ 5 லட்சம் என்று பாரபட்சம் காட்டி வருகிறது.
2015 செப்டம்பரில் சுமார் 13000 தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்களின் பங்கேற்புடன் ”பொம்பள உரிமை” என்னும் பெயரில் எழுந்த பெரும்போராட்டம் பகுதியளவில் வெற்றிபெற்றதன் ஊடாக சிஐடியூ, ஏஐடியூசி, ஐ.என்.டி.யூசி போன்ற திரிபுவாத, பிழைப்புவாத தொழிற்சங்களின் முகத்திரையைக் கிழித்து அம்பலப்படுத்தவும் செய்தது. அத்தொழிலாளர்களின் கோரிக்கையான நிலவுரிமைக் கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்தான் இருந்துக் கொண்டிருக்கிறது
பிரிட்டிஷ் காலனிய இந்தியாவில் 53 ஆயிரம் ஏக்கர் வனத்தை குத்தகைக்கு எடுத்த கண்ணன் தேவன் தேயிலை நிறுவனம், சமவெளிகளில் இருந்து கொத்தடிமைகளாக கொண்டு செல்லபட்ட தமிழர்கள் உழைப்பால் வனத்தை அழித்து தேயிலை தோட்டங்களாக மாற்றியது. இடுக்கி மாவட்ட அளவில், இன்றைக்கு அந்த நிறுவனம் 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் பல்கிபெருகி இருக்கிறது. 5 லட்சம் ஏக்கர் வனத்தை அழித்த டாடாவின் கண்ணன் தேவன் நிறுவனம். ஒட்டு மொத்தத்தையும் தனக்கே உரிமை கோரி வருகிறது . நீதிமன்றம் அந்த நிலத்தை டாடாவின் கண்ணன் தேவன் நிறுவனத்திற்கு உரிமையாக்க முடியாது என்று கூறிய பின்னரும் போலி இடது கூட்டணி அரசோ அல்லது காங்கிரசு அரசோ அந்த நிலத்தைக் கையகப்படுத்தவும், மக்களுக்கு எடுத்து வழங்கவும் தயாராக இல்லை. ”பிழைப்புக்கு வந்த தமிழர்களுக்கு நிலம் ஒரு கேடா?” என்று இழிவுபடுத்துகிறது கேரளா அரசு.
கண்ணன் தேவன் நிறுவனத்தால் பல்லாயிரம் தொழிலாளர்கள் மூணாறு தேயிலைத் தோட்டப் பகுதியில் பாதுகாப்பு இல்லாத ஆஸ்பேட்டாஸ் சீட்டுகளால் கட்டப்பட்ட ஒண்டி கொட்டைகைகளில் குடியமர்த்தப்பட்டு உள்ளார்கள். அம்மக்களுக்காகப் போராடக் கூடிய இயக்கங்களோ டாடா கண்ணன் தேவன் தேயிலை நிறுவனத்திடமிருந்து மூணார் தேயிலை தோட்டத்தை மாநில அரசு கையகப்படுத்த வேண்டும் என்று கோருகின்றன. அந்த மக்களுக்கு வீட்டுமனைகள் சொந்தமாக்கப்பட வேண்டும், பாதுக்காப்பான வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலுப்பட வேண்டிய தருணம் இது.
கேரள அரசே!
- மண்சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்கானப் பணிகளை உடனடியாக விரைவுபடுத்து!
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பிட்டை உடனடியாக வழங்கு!
- இறந்தவர்களுக்கு 25 இலட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு பாரபட்சமற்ற உரிய சிகிச்சையும், இழப்பீடும் வழங்கிடு!
- வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடு!
- பெரும் வெள்ளம், நிலச்சரிவு, மற்றும் பாதுக்காப்பற்ற பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களைப் பாதுக்காப்பான இடத்தில் உடனடியாக குடியமர்த்து!
சதிஸ்
பொதுச்செயலாளர்
சோசலிச தொழிலாளர் மையம்
தொடர்புக்கு :9940963131